ரூபாய் நோட்டு அறிவிப்பு ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.. கெஜ்ரிவால் குற்றச்சாட்டிற்கு மோடி விளக்கம்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படப் போவதாக முன்கூட்டியே யாரிடம் தெரிவிக்க வில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டோக்கியோ: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று முன்கூட்டியே நண்பர்களிடம் தெரிவிக்க வில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியதற்கு ஜப்பானில் விளக்கம் அளித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி.
கடந்த 9ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 8ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் சாதாரண பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இன்றும் கூட அவர்களுடைய பணத்தை அவர்கள் எடுக்கவே ஒரு நாள் முழுவதும் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களின் வாசலுக்கு முன்னாள் காத்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தவுடன் வழக்கம் போல் ஜப்பான் நாட்டிற்கு சென்று விட்டார் பிரதமர் மோடி. இங்கு மக்கள் படும் பாடுகள் குறித்து எந்த கவலையும் இல்லாமல் அயல்நாட்டு பயணத்தை பிரதமர் மேற்கொண்டிருக்கிறார் என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பாஜக தனது நண்பர்களுக்கு சொல்லிவிட்டதாக குற்றம்சாட்டினார். இதனால் பலர் தங்களிடம் இருந்த பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டனர் என்றும், இந்த அறிவிப்பிற்கு பின்னர் நிறைய சந்தேகங்கள் எழுவதாகவும் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இந்நிலையில், கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் இன்று பிரதமர் மோடி ஜப்பானில் பதில் அளித்துள்ளார். அதில், "500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முடிவை நீண்ட யோசனைக்கு பிறகே எடுத்தேன். இதுகுறித்து முன்கூட்டியே யாரிடமும் நான் சொல்ல வில்லை, மக்கள் படும் சிரமங்களுக்கு தலை வணங்குகிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications