மோடி- நவாஸ் ஷெரீப் நாளை சந்திப்பு: 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு
உபா: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு (ஸ்கோ மாநாடு) நடைபெறும் ரஷ்யாவின் உபா நகரில் ஜூலை 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆறு நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு மற்றும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா சென்றுள்ளார்.

உபா நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பும் வருகை தர இருக்கிறார். ஜூலை 10ம் தேதி இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் நாட்டு வங்கிகளை இரு நாடுகளிலும் அமைப்பது. பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு விசா வழங்குவது. ஸ்ரீநகர்-முசாபர்பாத், டெல்லி-லாகூர் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு விசா வழங்குவது உள்ளிட்ட ஒப்பந்தங்களும் இதில் அடங்கும்.
புனித மாதமான ரம்ஜான் தொடங்கும் போது, நவாஸ் ஷெரீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மோடி அவருக்கு ரம்ஜான் வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார். அப்போது இந்திய சிறையில் வாடும் பாகிஸ்தான் மீனவர்களை விடுவிப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காட்மாண்டுவில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடியும் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்துக்கொண்டனர். இருப்பினும் அந்த சந்திப்பின் போது இருதரப்பு பேச்சு வார்த்தை நடைபெறவில்லை.
இதனிடையே ரஷ்யாவின் உபா நகரில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் ஹவாஜா ஆசிப் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். பாகிஸ்தானிடம் உள்ள அணு குண்டுகள் பார்வைக்கு மட்டும் வைக்கப்படவில்லை. அவற்றை எந்நேரமும் பயன்படுத்தவே வைத்திருக்கிறோம்.
தற்போது இந்தியாவுடன் போர் அபாயம் இல்லை. ஆனால் போர் அபாயம் என்பது நிரந்தரமானது தான்.எனவே, அணு குண்டுகளை பயன்படுத்தக் கூடிய வகையில் இந்தியாவுடன் போர் நீளக்கூடாது என பிரார்த்தனை செய்கிறோம். ஒருவேளை போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் ராணுவம் அணு குண்டுகளை பயன்படுத்தும் என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ அமைச்சரின் பேச்சு இந்தியாவில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications