செவ்வாய் கிரகத்தை அணு குண்டு வீசி சூடுபடுத்தத் திட்டம்?.. இந்த பகீர் செய்தியைப் படிங்க!
நாசா: செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் அணுகுண்டை வீசி அங்கு செயற்கையாக வெப்பத்தை உருவாக்க மகா கோடீஸ்வரர் எலன் மஸ்க் திட்டமிட்டிருப்பதாக வந்த செய்தியை அவர் மறுத்துள்ளார்.
மாறாக, செவ்வாய் கிரகத்திற்கு மேலே செயற்கையாக சில சூரியன்களை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் வெப்பத்தை கொண்டு வரலாம் என்று அவர் கூறியுள்ளார்.
செவ்வாய் கிரகத்தை சூடுபடுத்த வான் வெளியிலேயே வெப்பத்தை உருவாக்குவதே தனது திட்டம் என்றும் மஸ்க் கூறியுள்ளார். மாறாக அணு குண்டு வீசும் திட்டம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ்...
இந்த மஸ்க் யார் தெரியுமா.. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவர் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கையில் எடுத்துள்ளவர் ஆவார். இதற்காக ஆட்களையும் கூட தேர்வு செய்து விட்டது இந்த நிறுவனம்.
செயற்கைச் சூரியன்கள்...
இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் வெப்பத்தை உருவாக்க சில திட்டங்களை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, செவ்வாய் கிரகத்தின் இரு துருவப் பகுதிகளிலும் வான்வெளியில் குண்டுகளைப் பயன்படுத்தி அதை வெடிக்கச் செய்து செயற்கையாக சூரியன்களை உருவாக்குவது ஒரு திட்டமாகும். சில விநாடிகளுக்கு ஒருமுறை இது வெடித்தபடியே இருக்கும்.
அணுகுண்டு திட்டமில்லை...
இதன் மூலம் கிரகத்தில் வெப்பமும், சக்தியும் உண்டாகும் என்பது மஸ்க்கின் வாதமாகும். இதுதான் தனது திட்டம் என்று கூறியுள்ள மஸ்க், இதற்காக அணுகுண்டைப் போடும் திட்டமெல்லாம் இல்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.
விண்வெளியில்...
மேலும் அவர் கூறுகையில், "செயற்கையாக இரு சூரியன்களை உருவாக்குவதே எனது திட்டம். இதை செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் ஏற்படுத்தப் போவதில்லை. மாறாக வான்வெளியில்தான் இது நிகழ்த்தப்படும்" என்கிறார்.
வெப்பத்தை உருவாக்கி...
ஆனால் கடந்த மாதம் இதே மஸ்க்தான் செவ்வாய் கிரகத்தில் அணுகுண்டைப் போட்டு வெப்பத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
செவ்வாயில் மனிதர்கள்...
மஸ்க் மேலும் கூறுகையில், "செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்க வேண்டும் என்றால் அந்த கிரகத்தில் வெப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் சக்தி கிடைக்கும்" என்றார்.