கடையில் ‘காண்டம்’ திருடிய மகளைக் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை... தாயும் உடந்தை!
பெர்லின்: ஜெர்மனியில் ஆண் நண்பரோடு உறவு கொள்வதற்காக கடையில் காண்டம் திருடிய மகளை கொலை செய்த பெற்றோரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல்லா கான் என்ற நபர் ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார். சமீபகாலமாக தங்களது 19 வயது மகளின் நடவடிக்கைகள் சரியில்லை என அவரது மனைவி அப்துல்லாவிடம் புகார் தெரிவித்து வந்துள்ளார். தலைக்கு சரிவர முக்காடிடுவதில்லை என்றும், அதிக நாட்கள் இரவில் வெளியே தங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மகளிடம் விசாரித்த போது, அவருக்கு ஆண் நண்பர் ஒருவர் இருப்பது தெரியவந்தது. அவருடன் சேர்ந்து அப்பெண் வெளியில் தங்குவதும், ஊர் சுற்றுவதையும் அப்துல்லா கண்டுபிடித்தார். ஆனால், இவற்றில் அப்துல்லாவிற்கு உடன்பாடில்லை. இது குறித்து மகளை அவர் கண்டித்துள்ளார். ஆனால், தொடர்ந்து தன் நடவடிக்கைகளை அப்பெண் திருத்திக் கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடையொன்றில் காண்டம் திருடியபோது போலீசில் சிக்கிக் கொண்டார் அப்பெண். அப்துல்லாவிற்கு இது தொடர்பாக போலீசார் தகவல் அளித்தனர்.
விசாரணையில் தனது ஆண் நண்பருடன் தங்குவதற்காக காண்டத்தை அப்பெண் திருடியது உறுதியானது. அதனைத் தொடர்ந்து போலீசார் எச்சரித்து அப்பெண்ணை அப்துல்லாவுடன் அனுப்பி வைத்தனர்.
மகள் மீது கோபத்தில் இருந்த அப்துல்லா, வீட்டிற்கு வந்ததும் தன் மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர் அப்பெண்ணின் சடலத்திற்கு ஆடை அணிவித்து வீல் சேரில் அமர வைத்து, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று புதைத்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசாரின் விசாரணையில், ‘குடும்ப கவுரவத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், மகளைக் கவுரவக் கொலை செய்ததாக' அப்துல்லா தெரிவித்துள்ளார்.