ஒரு வாட்ச் செய்வது பெருங்குற்றமா?: அமெரிக்காவில் முஸ்லீம் மாணவன் கைது
இர்விங்: அமெரிக்காவில் கடிகாரம் ஒன்றை செய்த குற்றத்திற்காக 14 வயது பள்ளி மாணவன் அகமது முகமது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள இர்விங் நகரில் இருக்கும் மெக்ஆர்தர் உயர் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருபவர் அகமது முகமது(14). சூடானில் இருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிய முகமது எல் ஹஸன் முகமுதுவின் மகன்.
அகமதுவுக்கு டிவி, கம்ப்யூட்டர், செல்போன்களை ரிப்பேர் செய்வது பிடிக்கும். இந்நிலையில் அவர் தானே சொந்தமாக ஒரு கடிகாரத்தை செய்தார். கடிகாரத்தை செய்த குஷியில் அவர் அதை தனது ஆசிரியர்களிடம் காண்பிக்க நினைத்து அதை பள்ளிக்கு எடுத்துச் சென்றார்.
பள்ளியில் தனது ஆசிரியையிடம் அகமது தான் செய்த கடிகாரத்தை ஆசை ஆசையாக காண்பித்தார். அந்த ஆசிரியையோ அகமதுவின் முயற்சியை பாராட்டாமல் அவர் செய்திருப்பது வெடிகுண்டு என்று நினைத்துவிட்டார். உடனே இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வந்து சிறுவனின் கைகளில் விலங்கு மாட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் செய்தது வெறும் கடிகாரம் தான் என்பதை அறிந்து அவரை விடுவித்தனர். இதற்கிடையே இந்த செய்தி அறிந்த பலர் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் அகமதுவுக்கு ஆதரவாகவும், போலீசாரை கண்டித்தும் கருத்து தெரிவித்தனர்.
அகமதை எப்படி கைது செய்யலாம் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அகமது ஒரு முஸ்லீம் என்பதால் அவரின் திறமையை பாராட்டாமல் அவரை கைது செய்து அசிங்கப்படுத்தியதாக பலரும் கோபம் அடைந்துள்ளனர்.
அகமதுவை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் வேறு செய்துள்ளது. ஒரு குற்றமும் செய்யாத தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த பள்ளியில் தொடர்ந்து படிக்க அகமது விரும்பவில்லை.