மியான்மர்: ஆங் சான் சூகிக்கு பிப்.15 வரை காவல் - சமூகவலைத்தளங்களுக்கு இடைக்கால தடை
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விதிமுறைகளை ஆங் சான் சூகி தனது பதவிக் காலத்தில் மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூகியை 14 நாட்கள் காவலில் வைக்க தகினாத்திரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நைபிடா: ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விதிமுறைகளை ஆங் சான் சூகி தனது பதவிக் காலத்தில் மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அவரை வரும் 15 ஆம் தேதி வரை 14 நாள் காவலில் வைத்திருக்க தகினாத்திரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மியான்மரில் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு எம்.பி.டி உட்பட இணையதள சேவை வழங்குனர்களால், பேஸ் புக் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது.
மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது.

ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது. இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.
தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை பிடித்தது. அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.
இதனிடையே ஆங் சான் சூகி மீது இறக்குமதி முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தேசிய ஜனநாயகக் கட்சி செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தனது பதவிக் காலத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விதிமுறைகளை ஆங் சான் சூகி மீறியதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை வரும் 15-ஆம் தேதி வரை 14 நாள் காவலில் வைத்திருக்க தகினாத்திரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தை மீறியதாக அதிபா் வின் மியின்ட் மீதும் முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆங் சான் சூகியின் இல்லத்தில் சோதனை நடத்திய ராணுவக் குழு, அங்கிருந்து 10 வாக்கி டாக்கி கருவிகளையும், வேறு சில தகவல் தொடா்பு சாதனங்களையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த சாதனங்களை உரிய அனுமதியின்றி ஆங் சாங் சூகி இறக்குமதி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி முறைகேடு வழக்கில் இதனை ஆதாரமாகப் பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தள பக்கங்களுக்குத் தடை
ராணுவ அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மரில் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மியான்மரில் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு எம்.பி.டி உட்பட இணையதள சேவை வழங்குனர்களால், பேஸ் புக் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சகம் நாட்டின் ஸ்திரத்தன்மை பேணுவதற்காக பிப்ரவரி 7ஆம் தேதி வரை பேஸ்புக் தடை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது.
மேலும் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மக்கள், போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்றும், பேஸ்புக்கைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications