துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றும் மோடி
அபுதாபி: அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மத்தியில் இன்று உரையாற்ற உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அபுதாபியை அடைந்த மோடிக்கு விமான நிலையத்தில் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யான் வரவேற்பு அளித்தார்.
அவர் அமீரக அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதன் பிறகு அபுதாபியில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களை சந்தித்து பேசினார். மாலை வேளையில் அபுதாபியில் உள்ள ஷேக் ஜயீத் மசூதிக்கு சென்றார். இதையடுத்து இளவரசர் ஹமீத் பின் ஜயீத் அல் நஹ்யான் மோடிக்கு இரவு விருந்து அளித்தார்.
இன்று துபாய் செல்லும் மோடி அங்கு பிரதமர் மற்றும் துபாயின் மன்னருமான முகமது பின் ராஷித் அல் மக்தூமை சந்தித்து பேசுகிறார். துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மத்தியில் அவர் இன்று மாலை உரையாற்றுகிறார்.
மோடியின் சுற்றுப்பயணத்தால் இரு நாட்டு உறவு மேம்படும் என்று அமீரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஜயீத் அல் நஹ்யான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.