கோளாறு, மோசமான வானிலை: நாசாவின் விண்கலம் ஏவுதல் ஒத்திவைப்பு
கேப் கனாவரல்: செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்ப முன்னோட்டமாக நாசா ஓரியன் விண்கலத்தை விண்ணில் ஏவவிருந்தது. ஆனால் கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக விண்ணில் ஏவும் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் செயல் வடிவம் பெற 2030ம் ஆண்டு வரையாவது காத்திருக்க வேண்டும். இந்நிலையில் முன்னோட்டமாக ஆளில்லா ஓரியன் விண்கலத்தை வியாழக்கிழமை காலை 7.05 மணிக்கு விண்ணில் ஏவ நாசா முடிவு செய்து அதற்கான கவுன்ட் டவுனும் தொடங்கியது. ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக அது விண்ணில் ஏவப்படவில்லை.
விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கனாவரலில் இருந்து ஏவப்படுவதாக இருந்தது.
ஓரியன் அமெரிக்க நேரப்படி இன்று காலை 7.05 மணிக்கு விண்ணில் ஏவப்படும் அல்லது 9.44 மணிக்குள் ஏவப்படும். ஓரியன் விண்கலத்தில் 4 பேர் பயணம் செய்ய முடியும். ஓரியன் மூலம் நிலா, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பி வைக்கலாம். ஓரியன் திட்டத்தை நாசா கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி அறிவித்தது.
அமெரிக்காவை போன்று இந்தியாவும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபடத் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.