கொரோனாவை தாங்க முடியாது.. அந்த இனத்திற்கே ஆபத்து.. எப்படி இருக்கிறது ஆதிவாசிகளின் "சென்டினல்" தீவு?
கொரோனா தாக்குதல் அந்தமானில் ஏற்பட்டு இருக்கும் நிலையில் அங்கு இருக்கும் பழங்குடி இனங்களாக சென்டினலிஸ் உள்ளிட்ட இனங்கள் மோசமாக பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
போர்ட் பிளேயர்: கொரோனா தாக்குதல் அந்தமானில் ஏற்பட்டு இருந்த நிலையில் அங்கு இருக்கும் பழங்குடி இனங்களாக சென்டினலிஸ் உள்ளிட்ட இனங்கள் மோசமாக பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் சிறுசிறு தீவுகளில் கூட கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது. இதனால் அந்தமான் நிக்கோபாரில் உள்ள தீவு கூட்டங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. அந்தமானில் உள்ள சென்டினல் தீவு உலகின் மர்மமான தீவுகளில் ஒன்று.
இங்கு வசிக்கும் சென்டினலீஸ் மக்கள், தங்களை உலகின் பிற மக்களிடம் இருந்து பிரித்து, தனியாக வாழ்ந்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 12 ஆயிரம் வருடமாக அவர்கள் அங்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட அங்கு செல்ல முயன்று போது ஜான் ஆலன் என்ற அமெரிக்கர் கொலை செய்யப்பட்டார்.

தனித்து விடப்பட்ட மக்கள்
அந்த அளவிற்கு இந்த தீவு மனிதர்களிடம் இருந்து தனித்து விடப்பட்டு இருக்கிறது. அந்தமானில் இப்படி நிறைய பழங்குடி இனங்கள் உள்ளது . கிரேட் அந்தமானீஸ், ஜார்வாஸ், ஓங்கே, ஷாம்பென், சென்டினலீஸ் ஆகிய ஆதிவாசி இனங்கள் இருக்கிறது. இவர்களின் மொத்த மக்கள் தொகையே 900ம்தான். ஆம் கிரேட் அந்தமானீஸ் 60 பேர், ஜார்வாஸ் 520 பேர், ஓங்கே 124 பேர், ஷாம்பென் 200 பேர், சென்டினலீஸ் 60 பேர்தான் இருக்கிறார்கள்.

அதிக வாய்ப்பு
மிக குறைவான மக்களே இங்கு இருப்பதால், அங்கு கொரோனா வைரஸ் தாக்கினால், மொத்தமாக அந்த இனமே அழியும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுகிறார்கள். இதற்கு அவர்கள் நிறைய காரணங்களை அடுக்குகிறார்கள். முதலில் இந்த தீவுகளில் மக்கள் தொகை மிக மிக குறைவாக இருக்கிறது. அடுத்து இவர்களுக்கு போதிய நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது. இவர்களால் நோய்களை அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியாது.

போதிய மருத்துவம் இல்லை
இவர்களுக்கு போதிய மருத்துவ வசதியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை வெளி மனிதர்கள் தொடர்பு கொள்வது சமீப நாட்களாக அதிகரித்து இருப்பதால், இவர்களுக்கு கொரோனா ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதிவாசி குழுக்கள் குறித்து பல வருடங்களாக ஆராய்ந்து வரும் மானுடவியலாளர் மதுமாலாவே இதுகுறித்து அச்சம் எழுப்பி உள்ளார். மதுமாலாதான் அந்தமானில் உள்ள சென்டினலிஸ் தீவுக்கு முதலில் சென்று அவர்களுடன் பழகிய நபர்.

மதுமாலா எச்சரிக்கை
சென்டினலிஸ் தீவு மக்கள் மதுமாலாவுடன் மிகவும் இயல்பாக பழகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மக்களுக்கு கொரோனா பாதிக்க நிறைய வாய்ப்பு உள்ளது என்று மதுமாலாவே தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர்களுக்கு கொரோனா தாக்க அதிக வாய்ப்பு உள்ளது. இவர்களை மிக எளிதாக நோய்கள் தாக்கும். ஒருவருக்கு கொரோனா வந்தாலும் மொத்த இனமே அழிந்து விடும். அதனால் உடனடியாக இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு முன் என்ன நடந்தது ?
இதற்கு முன்பே இவர்கள் கூட்டத்தில் பலர் மிக மோசமான நோய்களால் பலியாகி உள்ளனர். இதற்கு முன் இந்த கூட்டத்தில் இருக்கும் சிலர் வெளியுலகத்துடன் தொடர்பு கொண்ட காரணத்தால் ஃப்ளு காய்ச்சல் மற்றும் தட்டம்மை போன்ற நோய்கள் ஏற்பட்டது. இதனால் அங்கு பலர் பலியாகி உள்ளனர். உலகில் நோய்கள் பரவும் நேரங்களில் இங்கு இருக்கும் மக்களும் அதனால் அதிக அளவில் பலியாவது வழக்கம். இதனால்தான் 2800 என்று இங்கு இருந்த மக்கள் தொகை 900 ஆக குறைந்துள்ளது.

அச்சம் தெரிவிக்க காரணம்
இவர்கள் இப்படி அச்சம் தெரிவிக்க சில காரணங்கள் இருக்கிறது. இந்த தீவில் இருக்கும் மக்கள் சிலர் வெளியுலகத்துடன் ரேஷன் பொருட்களை பெறுவதற்காக தொடர்பில் உள்ளனர். அந்தமான் அதிகாரிகளை சந்தித்து உணவு பொருட்களை பெறுவதை இவர்கள் வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். அதேபோல் சென்டினல் தீவு தவிர இங்கு இருக்கும் மற்ற பழங்குடி தீவுகளில் அடிக்கடி வெளியுலக மக்கள் சென்று வருகிறார்கள்.

பலர் பாதிக்க வாய்ப்பு
இதனால் ஜார்வாஸ் உள்ளிட்ட பழங்குடி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே அந்தமானில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. இவர்கள் எல்லோரும் போர்ட் பிளேயர் பகுதியை சேர்ந்தவர்கள். டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்ததன் மூலம் இவர்களுக்கு கொரோனா ஏற்பட்டது. இவர்கள் எல்லோரும் குணப்படுத்தப்பட்டுவிட்டனர்.

சிலருக்கு அறிகுறி
ஆனால் இன்னும் இந்த 10 பேர் தொடர்பு கொண்ட அந்தமான் மக்கள் 1500 பேர் வரை சிறு சிறு அறிகுறியுடன் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் யாரை எல்லாம் தொடர்பு கொண்டாடர்கள். எங்கே எல்லாமே சென்றார்கள் என்பதை உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் மூலம் பலருக்கு அங்கு கொரோனா பரவும் அச்சம் உள்ளது . இதனால் அந்தமான் - நிக்கோபார் தீவின் நிர்வாகிகள் கடுமையான கட்டுப்பாடுகளை அங்கு விதிக்க தொடங்கி உள்ளனர் .












Click it and Unblock the Notifications