தென்கொரியாவில் கப்பல் விபத்து: 300க்கும் மேற்பட்டோர் மாயம்
சியோல்: தென் கொரியாவில் 459 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று மூழ்கி விபத்துக்குள்ளானதில் 2 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 300க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான கப்பலில் பள்ளி மாணவர்கள் 325 பேர் இருந்தனர். ஜிஜீ தீவுகளுக்கு தென் பகுதியில் சென்று கொண்டிருந்த கப்பல் திடீரென ஒரு பக்கமாக சாய்ந்து நீரில் மூழ்கத் தொடங்கியது. இதனையடுத்து படகில் இருந்து உதவி கோரப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர் சென்றனர். கப்பல் நீரில் மூழ்கியதில் 2 பேர் பலியாகினர். 180 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ளவர்களின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.
கப்பல் மூழ்குவதற்குள் கப்பலில் இருந்த அனைவரும் குதித்து விட்டதாக கப்பலில் பயணம் செய்தவர்கள் கூறுகின்றனர். எனினும், மூழ்கிய கப்பலுக்குள் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மீட்புப் பணியில் 16 ஹெலிகாப்டர்கள், 34 மீட்புப் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மொக்போ சிட்டி கடலோர காவல்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 180 பயணிகள் மீட்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் கார்களும், டிராக்டர்களும் ஏற்றி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் 900 மக்களை ஏற்றி செல்லும் திறன் வாய்ந்தது. கப்பல் விபத்துக்குள் சிக்கியதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் அங்கு கடும் பனிமூட்டம் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு மிட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications