நில அதிர்வுகளால் அதிரும் காத்மாண்டு: பலியானோர் எண்ணிக்கை 3,000 ஆக உயர்வு
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தொட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டுவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பழமைவாய்ந்த கட்டிடங்கள், குடியிருப்புகள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தொட்டுள்ளது.

நிலநடுக்கத்தை அடுத்து நேபாளில் ஆப்டர்ஷாக் எனப்படும் நில அதிர்வுகள் அடிக்கடி ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு மக்கள் தெருக்களில் படுத்து தூங்கினர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்திருப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
மருந்தகங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. தண்ணீருக்காக மக்கள் டிரக்குகள் முன்பு நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர். அவ்வப்போது ஏற்படும் நில அதிர்வுகளால் மீட்பு பணி பாதிக்கப்பட்டு வருகிறது.
இன்னும் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் உதவ இந்தியா தவிர அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் முன் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications