நேபாளத்தில் தோண்டத் தோண்ட கிடைக்கும் பிணங்கள்: பலி எண்ணிக்கை 2,200 ஆக உயர்வு
காத்மாண்டு: நேபாளத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 7.9 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுகத்தால் நேபாளத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன, சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பிரபலமான தரஹாரா கோபுரம் மற்றும் தர்பார் ஸ்கொயர் ஆகியவையும் சேதம் அடைந்துள்ளன.
நிலநடுக்கத்தால் நேபாளம் நிலைகுலைந்து போயுள்ளது.

பலி
நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளது. இதில் காத்மாண்டுவில் மட்டும் 1000 பேர் பலியாகியுள்ளனர். மேலும் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இமய மலை
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இமய மலையில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேறும் வீரர்கள் 17 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 80 ஆண்டுகளில் நேபாளத்தில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது.

இந்தியர்கள் பலி
சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு நேபாளத்தில் வசித்து வந்த இந்திய தூதரக ஊழியரின் மகள் உள்பட 2 இந்தியர்கள் பலியாகியுள்ளனர் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும் இந்திய தூதரக வளாகத்தில் இருந்த வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் பொதுப்பணித்துறை அதிகாரியின் மகள் பலியாகியுள்ளார். இது தவிர காத்மாண்டுவில் உள்ள பிர் மருத்துவமனையில் ஒரு இந்தியர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியர்கள் மீட்பு
நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து நேபாளத்தில் இருந்து 550 இந்தியர்களை இந்திய விமானப்படை மீட்டுள்ளது. மீதமுள்ளவர்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது. நேபாளத்தில் மீட்பு பணி மேற்கொள்ள இந்தியாவும், சீனாவும் உதவி செய்ய முன்வந்துள்ளது.

தரஹாரா கோபுரம்
காத்மாண்டுவில் உள்ள தரஹாரா கோபுரம் இடிந்து விழுந்த இடத்தில் இருந்து சுமார் 200 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தில் யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமான காத்மாண்டுவில் உள்ள தர்பார் ஸ்கொயர் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications