நேபாளில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்: தவிக்கும் மக்கள்
காத்மாண்டு: நிலநடுக்கத்தையடுத்து நேபாளில் உள்ள மருத்துவமனைகளில் காயம் அடைந்தோர் கூட்டம் நிரம்பி வழிகிறது.
நேபாளில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தொட்டுள்ளது. மேலும் ஆயிரக் கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு நிலைகுலைந்து போயுள்ளது.

கட்டிட இடிபாடுகளை அகற்ற அகற்ற பிணங்களாக வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் நேபாளில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் காயம் அடைந்தவர்கள் வெளியே தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இறந்தவர்களின் உடல்களை வைக்கக் கூட மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லை.
பல இடங்களில் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வழிகள் சேதம் அடைந்துள்ளதால் அங்கு மீட்பு குழுவினரால் செல்ல முடியவில்லை.
கிராமங்கள் தவிர பல்வேறு நகரங்களிலும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனம் நேபாளத்திற்கு மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. நேபாளத்திற்கு இங்கிலாந்து 7.6 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளது. அமெரிக்கா தனது பேரிடர் மேலாண்மை குழுவை நேபாளத்திற்கு அனுப்பி வைத்ததுடன் 1 மில்லியன் டாலர் நிதி அளித்துள்ளது.
4.5 மில்லியன் டாலர் நிதி அளிப்பதாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கூட்டாக அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்தியா 13 ராணுவ விமானங்களில் உணவு, டென்டுகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பி வைத்தது.
இலங்கை ஒரு விமானத்தில் நிவாரணப் பொருட்களும், மற்றொரு விமானத்தில் டாக்டர்கள் மற்றும் நர்ஸுகளையும் நேபாளத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications