நேபாள நாடாளுமன்றம் நள்ளிரவில் திடீர் கலைப்பு- நவ.-ல் 2 கட்டங்களாக பொதுத்தேர்தல் நடத்த உத்தரவு!
காத்மாண்டு: நேபாளத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வராததால் நேற்று நள்ளிரவில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார். மேலும் நவம்பர் மாதத்தில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நேபாள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கடந்த ஆண்டு உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதனையடுத்து நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமராக இருந்த ஷர்மா ஒலி பரிந்துரைத்தார். இதனடிப்படையில் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி நடவடிக்கை மேற்கொண்டு நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

ஆனால் நேபாள உச்சநீதிமன்றம் தலையிட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை நிராகரித்தது. இதனையடுத்து நேபாள பிரதமராக ஷர்மா ஒலி மீண்டும் நியமிக்கப்பட்டார். அத்துடன் கடந்த 10-ந் தேதி நாடாளுமன்றத்தில் ஷர்மா ஒலி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷர்மா ஒலி தோல்வி அடைந்தார். இதனால் புதிய அரசு அமைக்க எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
ஆனால் எதிர்க்கட்சிகளும் புதிய அரசு அமைக்க முன்வரவில்லை. இதனால் நாடாளுமன்றத்தை நேற்று நள்ளிரவில் கலைத்து உத்தரவிட்டார் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி. அத்துடன் நவம்பர் 12, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தவும் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications