காலை, மாலை.. நாய்களுக்காக கட்டாயம் இதை செஞ்சாகணும்.. ஜெர்மனி அரசு கறார்.. இருக்கற டென்சன்ல இதுவேறயா
பெர்லின்: ஜெர்மனி நாட்டில் நாய்கள் வைத்திருப்போர் அதனை இருவேளைகள் நடைபயிற்சி அழைத்து செல்ல வேண்டும் என அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
வீடுகளில் நாய், பூனை, கிளி, கோழி, ஆடு, மாடு போன்றவைகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்கள் அநேகம் பேர். குறிப்பாக பெரும்பாலான வீடுகளில் நாய்கள் தான் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.

அவற்றை பராமரிப்பது அத்தனை சுலபமான விஷயம் அல்ல. அவற்றுக்கு தேவையான உணவுகளை சமைத்து போடுவது, காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி அழைத்து செல்வது, போதிய இடைவெளியில் தடுப்பூசி போடுவது உள்பட நாய்களை பராமரிப்பதற்கு என ஒரு வழிமுறையே உள்ளது.
ஆனால் பெரும்பாலோனார் இந்த வழிமுறைகளை எல்லாம் சரியாக பின்பற்றுவதில்லை. தங்களது வேலை பளு காரணமாக, நாய்களை ஒருவேளை மட்டுமே நடைபயிற்சி கூட்டி செல்பவர்கள் பலர். எனவே தான் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது ஜெர்மனி அரசு.
ஜெர்மனி நாட்டின் விவசாயம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் ஜூலியா க்ளோக்னர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "ஜெர்மனி நாட்டில் நாய்கள் வளர்ப்பவர்கள் இனி அதனை இரண்டு வேளை, அதாவது காலை அரை மணி நேரம், மாலை அரை மணி நேரம் என நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் கட்டாயம் நடைபயிற்சி அழைத்து செல்ல வேண்டும். செல்லப் பிராணிகள் ஒன்றும் பொம்மைகள் அல்ல. அவற்றின் தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டும்", என கூறியுள்ளார்.
அமைச்சர் ஜூலியா க்ளோக்னரின் இந்த அறிவிப்பு ஜெர்மனியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டை பொறுத்தவரையில் மொத்த மக்கள் தொகையில் 5ல் ஒருவர் நாய் வளர்க்கிறார்கள். எனவே அரசின் இந்த புதிய உத்தரவை பெரும் சுமையாக பார்க்கிறார்கள் மக்கள்.
'நாய் வளர்ப்பவர்கள் ஏற்கனவே அதனுடன் போதிய அளவு நேரம் செலவழிக்கின்றனர். அப்படி இருக்கையில் இந்த புதிய உத்தரவு நகைப்புக்குரியது' என பத்திரிகைகள் விமர்சித்துள்ளன. ஒவ்வொரு நாய் வகைக்கும் ஒவ்வொரு மாதிரியான நடைபயிற்சி தேவைப்படும். எனவே அனைத்து வகையான நாய்களுக்கும் ஒரு பொதுவான விதியை உருவாக்குவது தேவையற்றது என்கிறார்கள் நாய் வளர்ப்பாளர்கள்.
இந்த புதிய உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது அரசு. இருப்பினும் இதனை வெற்றிகரமாக செய்வோம் என சூளுரைத்திருக்கிறார் அமைச்சர் ஜூலியா க்ளோக்னர். வாயில்லா ஜீவன்களுக்காக அக்கறைபடும் அவரது மனசு யாருக்கு வரும் என்ற ஆதரவு குரல்களும் கேட்கத்தான் செய்கின்றன.












Click it and Unblock the Notifications