கொலம்பியாவில் புத்தாண்டு அன்று வன்முறை வெடித்து 24 பேர் பலி: ஆயுதங்கள் பறிமுதல்
பொகோட்டா: தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் புத்தாண்டு அன்று நடந்த வன்முறை சம்பவங்களில் 24 பேர் பலியானார்கள்.
தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் புத்தாண்டு அன்று பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் 24 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் கமாண்டர் ரொடால்போ பாலோமினோ கூறுகையில்,
2014ம் ஆண்டு நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது நடந்த வன்முறை சம்பவங்களில் 36 பேர் பலியாகினர். இந்நிலையில் இந்த ஆண்டு 24 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பலி எண்ணிக்கை 33 சதவீதம் குறைந்துள்ளது.
புதன்கிழமை இரவு அன்று மட்டும் 113 துப்பாக்கிகள், 2 ஆயிரத்து 56 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வழக்கத்தை விட இம்முறை அதிக அளவில் துப்பாக்கிகளும், கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.
புத்தாண்டையொட்டி புதன்கிழமை நள்ளிரவில் கொலம்பியாவில் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.