பிறந்தது 2019.. முதல் ஆளாக கொண்டாடி மகிழ்ந்த நியூசி, ஆஸ்திரேலியா!
நியூசிலாந்தில் முதல் புத்தாண்டு பிறந்ததையொட்டி கொண்டாட்டங்கள் துவங்கி உள்ளன.
ஆக்லாந்து: நியூசிலாந்தில் 2019 புத்தாண்டு குதூகலத்துடன் பிறந்தது. இதனையொட்டி அந்நாட்டு மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
உலகிலேயே முதலாவதாக புத்தாண்டு கொண்டாடப்படும் நாடு நியூசிலாந்துதான். ஏனெனில் பூமிப்பந்தில் முதன்முதலாக சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடு நியூசிலாந்துதான்.
நமக்கு மாலை 4.30 மணி என்றால் அவர்களுக்கு அப்போதுதான் நள்ளிரவு 12 மணி துவங்கும். அதாவது இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் நம்மைவிட ஏழரை மணிநேரம் கூடுதலாகும்.
அதன்படி, முதல் நாடாக அம்மக்கள் 2019ஆம் ஆண்டினை வரவேற்றுள்ளனர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தி வருவதுடன், நள்ளிரவிலும் வானவேடிக்கைகள் வெடித்து சிதறி இரவை பகலாக்கி வருகின்றன.
தலைநகர் ஆக்லாந்து முழு அளவில் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. நியூசிலாந்து மக்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து கூறி மகிழ்ந்து வருவதுடன், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா
நியூசிலாந்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது. இதையடுத்து சிட்னி ஓபரா ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் விழாக்கோலம் பூண்டிருந்தன. ஆஸ்திரேலியா முழுவதும் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர். தொடர்ந்து ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் படிப்படியாக புத்தாண்டில் நுழைந்து வருகின்றன.