கேரள செவிலியருக்கு மரண தண்டனையை நாங்க விதிக்கவில்லை.. ஏமன் திடீர் விளக்கம்! அப்போ பின்னணியில் யார்?
சனா: கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஏமன் சிறையில் இருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி உறுதி செய்ததாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக அந்நாட்டு அரசு சில முக்கிய விளக்கங்களை அளித்துள்ளது.
ஏமன் நாட்டில் செவிலியராக வேலைக்குச் சென்றவர் கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா.. இவர் துரதிருஷ்டவசமாக அங்கே கொலை வழக்கு ஒன்றில் சிக்கி கைதானார். கடந்த 2017 முதல் அவர் அங்குச் சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் நிமிஷா பிரியாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதைத் எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த மேல்முறையீடு 2023 நவம்பரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது..
கேரள செவிலியர்:
இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நிமிஷாவின் மரண தண்டனையை அந்நாட்டின் அதிபர் ரஷாத் அல்-அலிமி உறுதி செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் அடுத்த ஒரு மாதத்தில் நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்றும் அவரை காப்பாற்ற ரத்த பணம் மட்டுமே ஒரே வழி என்றும் சொல்லப்பட்டது.
மறுப்பு:
பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருடன் ரத்த பணம் தொடர்பான பேச்சுவார்த்தையை நிமிஷாவின் தாய் நடத்தி வந்த நிலையில், இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிபர் ரஷித் அல்-அலிமி உறுதி செய்ததாக வெளியான தகவலுக்கு ஏமன் குடியரசின் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பின்னணியில் யார்:
ஏமன் தலைநகர் சனாவில் உள்ள மத்தியச் சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிமிஷா பிரியாவின் வழக்கு தொடர்பான அந்நாட்டுத் தூதரகம் இப்போது ஒரு முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளது. அதாவது இந்த முழு வழக்கு தொடர்பான விசாரணையை ஹவுதி போராளிகளே கையாண்டு வருவதாகவும் இதனால் ஏமன் நாட்டின் அதிபரும் தலைமை நீதி குழுவின் தலைவரான டாக்டர் ரஷித் அல்-அலிமி நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யவில்லை என்றும் இது தொடர்பாக வெளியான தகவல் தவறானது என்றும் ஏமன் அரசு தெரிவித்துள்ளது.
அதாவது இந்த வழக்கின் விசாரணையை ஹவுதிக்கள் கையாண்டதால் தங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் ஹவுதிக்களே மரண தண்டனையை இப்போது உறுதி செய்துள்ளதாக ஏமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
கேரளா பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா ஏமனில் தனியார் மருத்துவமனையில் முதலில் செவிலியராக வேலை செய்தார். சில காரணங்களால் அவரது கணவர் மற்றும் மகளும் 2014ல் இந்தியா திரும்பிய போது, அங்கு திடீரென உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. இதனால் நிதி சிக்கலை எதிர்கொண்ட நிமிஷா சொந்தமாக ஒரு கிளினிக் வைக்க முடிவு செய்தார். அந்நாட்டு சட்டப்படி வெளிநாட்டினர் சொந்தமாக கிளினிக் தொடங்க முடியாது என்பதால் அந்நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவரின் உதவியைக் கேட்டுள்ளார்.
இருவரும் இணைந்து கிளினிக்கை தொடங்கியுள்ளனர். ஆனால், அதன் பிறகு நிமிஷாவை அந்த நபர் மிரட்டியதாகவும் கிளின் வருமானத்தை மொத்தமாகப் பிடுங்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. நிமிஷா போட்டோக்களை மார்பிங் செய்த அவர், இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதாகச் சொல்லி அங்கு ஏமாற்றியிருக்கிறார். இதனால் கிளினிக் வருமானம் தனக்கே சொந்தம் எனச் சொல்லியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது பாஸ்போர்ட்டையும் கூட பிடுங்கியுள்ளார்.
என்ன நடந்தது:
இது தொடர்பாக அங்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போதும் உரிய நடவடிக்கை இல்லை. அப்போது அங்குள்ள ஜெயில் வார்டன் ஒருவர் தந்த ஆலோசனைப்படி மஹ்திவுக்கு மயக்க மருந்தைக் கொடுத்து தனது பாஸ்போர்ட்டை எடுக்க நிமிஷா முயன்றுள்ளார். எதிர்பாராத விதமாக மயக்க மருந்து ஓவர்டோஸ் ஆனதில் மஹ்தி உயிரிழந்தாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications