சீனா ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்பு இல்லை - உலக சுகாதார அமைப்பு ஆய்வுக்குழு
சீனாவின் வூகான் நகரில் உள்ள வைரஸ் சோதனை மையத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்பு இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழுவினர் கூறியுள்ளனர்.
வூகான்: சீனாவின் வூகான் நகரில் உள்ள வைரஸ் சோதனை மையத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்பு இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 2019 டிசம்பருக்கு முன்னர் வூகானில் அல்லது வேறு எங்கும் கொரோனா உடன் தொடர்புடைய பெரிய நோய் தொற்று குறித்து குழு எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 10,70,79,812 பேரை தாக்கியுள்ளது. 23 லட்சம் பேர் வரை இந்த கொடிய நோய்க்கு பலியாகியுள்ளனர். இந்த நோய் சீனாவின் ஆய்வகத்தில் இருந்துதான் பரவியதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.

கடந்த 14 மாதங்களுக்கு மேலாக கொரோனாவின் பிடியில் உலகம் சிக்கியுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உலகம் சற்றே இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனிடையே உருமாறிய கொரோனாவின் பரவல் பல நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோயின் தோற்றம் குறித்து தடயங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர்கள், சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு தொடங்கியது என்பது குறித்த விசாரணை மேற்கொண்டனர். உலக சுகாதார அமைப்பின் சிறப்பு ஆராய்ச்சி குழுவினர் கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் கண்டுபிடித்ததை இன்று வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 14ஆம் தேதி வூகான் நகரத்தை சென்றடைந்த உலக சுகாதார அமைப்பின் குழுவினர் இரண்டு வார தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்பட்ட முக்கிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.
முதலில் தொற்றுநோயின் தொடக்க இடமான வூகானின் கடல் உணவு சந்தையையும், கொரோனா தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வூகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தையும் பார்வையிட்டனர்.
வூகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது, அங்கு அவர்கள் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் செலவிட்டனர், மேலும் அவர்கள் கொரோனா வைரஸ்கள் குறித்த சீனாவின் முன்னணி நிபுணர்களில் ஒருவரும், வூகான் ஆய்வகத்தின் துணை இயக்குநருமான ஷி ஜெங்லி உட்பட பல விஞ்ஞானிகளை சந்தித்ததனர்.
கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக பல இடங்களில் விசாரணைகள் மேற்கொண்ட நிலையில், பல முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக குழு தெரிவித்துள்ளது. விசாரணையில் ஈடுபட்டுள்ள சீனத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் உலக சுகாதார நிபுணர்களுடன் இணைந்து இன்று தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வாளர்கள், 2019 டிசம்பருக்கு முன்னர் வூகானில் அல்லது வேறு எங்கும் கொரோனா உடன் தொடர்புடைய பெரிய நோய் தொற்று குறித்து குழு எதுவும் கண்டுபிடிக்கவில்லை. கொரோனா நோய் தொற்றிற்கு உரிய விலங்கு குறித்த ஆதாரம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. ஆய்வக கசிவினால் கொரோனா பரவியது என்பது மிகவும் சாத்தியமில்லை என தெரிவித்தனர்.
உலகளவில் 23 லட்சம், மக்களை பலிவாங்கிய கொரோனா வைரஸ் நோய் வவ்வால்களில் தோன்றியது மற்றும் பாலூட்டி வழியாக மனிதர்களுக்கு பரவி இருக்க கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.ஆனால் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழுவினர் கொரோனா நோய் தொற்றிற்கு உரிய விலங்கு குறித்த ஆதாரம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கூறி உள்ளனர்.
கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இதுவரை அதற்குரிய ஆதாரங்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளன என்று சீனா அணியின் தலைவர் லியாங் வனியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் குறித்த ஆய்வுக்கு சீனா அரசும் அந்நாட்டு விஞ்ஞானிகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர் என்றும் உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications