நோபல் பரிசு: யோஷினேரி ஓஷிமியின் ஆட்டோபேஜி கண்டுபிடிப்பு பற்றி அறிந்து கொள்ளுங்கள்
ஸ்வீடன்: உடல் செல்கள் தம்மை தாமே அழித்து கொள்வது பற்றிய ஆட்டோபேஜி என்ற ஆய்வு மேற்கொண்டதற்காக யோஷினேரி ஓஷிமி என்ற ஜப்பான் பேராசிரியருக்கு 2016ம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோபேஜி என்று அழைக்கப்படும் செல்களின் அடிப்படைச் செயல்பாடுகளின் ஒரு முக்கியமான அம்சத்தை கண்டுபிடித்தார் யோஷினேரி ஓஷிமி இந்த கண்டுபிடிப்பிற்காகவே அவருக்கு மருத்துவதுறைக்கான நோபல் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ பல்கலைக்கழக செல்லியல் துறை பேராசிரியரான யோஷினேரி ஓஷிமி மனித உடலில் உள்ள செல்கள் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் முறை குறித்து கடந்த 2014ல் புத்தகம் ஒன்றினை எழுதினார். அதில், ஆட்டோபேஜி முறை குறித்த விரிவான விளக்கங்கள் மற்றும் அந்த துறை ஆய்வு குறித்த வரலாற்றினையும் அவர் பதிவு செய்திருந்தார்.
உயிரியல் துறையில் மிகப்பெரும் கிளையாக வளர்ந்துவரும் ஆட்டோபேஜி குறித்த ஆய்வுகளை சர்வதேச அளவில் மிகச்சில விஞ்ஞானிகளே மேற்கொண்டு வரும் நிலையில், அந்த துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நோபல் பரிசு கவுரவம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. செல்கள் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் ஆட்டோபேஜி குறித்த ஆய்வுகள் மூலம் உடலில் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான செல்களைக் கண்டறிந்து சரி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஜப்பானில் இருந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறும் 23ஆவது நபர் ஆவார்.

ஆட்டோபேஜி
ஆட்டோ என்ற கிரேக்கச் சொல்லிற்கு செல்ப் என்று பொருள். பேஜி என்றால் சாப்பிடுதல். எனவே ஆட்டோபேஜி என்றால் தன்னைத்தானே சாப்பிடுதல் என்று பொருள்.
இந்தக் கருத்தாக்கம் 1960களில் முன்னிலை பெற்றது. அதாவது செல் தனது உள்ளடக்கங்களை சவ்வுகளுக்குள் அடக்கி தன்னையே சேதப்படுத்திக் கொண்டு பை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி இதனை லைசோசோம் என்ற ஒரு அறைபோன்ற அமைப்புக்கு மறுசுழற்சிக்கு அனுப்புகிறது. லைசோசோம் என்றால் புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்கள், மற்றும் கொழுப்புகள் ஆகியவற்றை சீரணிக்கும் ஒரு சிறப்புவாய்ந்த அறையாகும்.
|
நோபல் பரிசு
செல்லின் முக்கிய அலகுகளை இது கீழ்நிலைப்படுத்தும் பணிநிலையமாக செயல்படுகிறது. இதனைக் கண்டுபிடித்ததற்காக 1974ம் ஆண்டு மருத்துவ நோபல் பெல்ஜிய விஞ்ஞானி கிறிஸ்டியன் டி துவே என்பவருக்கு வழங்கப்பட்டது. இவர்தான் ஆட்டோபேஜி என்ற ஒரு சொல்லையும் அறிமுகப்படுத்தினார்.

யோஷினேரி ஓஷிமி
1990ம் ஆண்டுகளில் யோஷினேரி ஓஷிமி ஈஸ்ட் மூலம் ஆட்டோபேஜியை அடையாளம் காட்டும் முக்கிய மரபணுக்களை அடையாளம் கண்டார். இதே போன்ற ஒரு உயர் நுட்ப செயல்பாடு நமது செல்களிலும் உள்ளது என்பதையும் யோஷினேரி ஓஷிமி நிறுவினார். அதாவது நம் செல்கள் அதன் உள்ளடக்கங்களை எப்படி மறுசுழற்சிக்கு உட்படுத்துகிறது என்பது பற்றிய தெளிவாக விளக்கியுள்ளார் ஓஷிமி. இதன் மூலம்தான் நம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு புதிய வெளிச்சம் கிட்டியுள்ளது,

தன்னைத்தான் சாப்பிடும் செல்கள்
நாம் பட்டினி கிடப்பதற்கு நம் உடல் எப்படி தன்னை தகவமைத்துக் கொள்கிறது. அதே போல் கிருமித் தொற்றிற்கு வினையாற்றுவதை எப்படி செய்கிறது என்பது பற்றிய மிக முக்கியக் கண்டுபிடிப்பு இது என்று மருத்துவ அறிஞர்கள் வட்டம் கூறுகிறது. இந்த ஆட்டோபேஜி மரபணுக்களில் ஏற்படும் உருமாற்றம், திடீர் மாற்றம் எப்படி நோய்க்கு அடிப்படையாக விளங்குகிறது என்பது கண்டுபிடிக்கக் கூடியதே என்று தெரியவருகிறது.

புற்றுநோய்களுக்குக் காரணம்
இந்த ஆட்டோபேஜி தொடர்பான செல் செயல்பாடுகள்தான் பல்வேறு நரம்பியல் மற்றும் புற்றுநோய்களுக்குக் காரணமாகிறது. மனித செல்களுக்கு இணையான ஈஸ்ட்டின் செல்களை யோஷினேரி ஓஷிமி தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். ஆனால் ஈஸ்ட்டின் செல்கள் மிகச்சிறியது என்பதால் நுண்ணோக்கியில் அவரால் அதன் உள்ளமைப்புகளை வேறுபடுத்திப் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஆட்டோபேகி என்ற செயல்பாடு ஈஸ்டில் இருக்கிறதா என்பதே அவருக்கு ஐயமாக இருந்தது. ஆனால் அவர் தொடர்ந்து விடாமுயற்சியுடன் அதில் ஆட்டோபேஜி இருப்பதற்கான சோதனைகளை மேற்கொண்டு கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றார்.

ஈஸ்ட் மூலம்
1992ம் ஆண்டு தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டார் யோஷினேரி ஓஷிமி. ஈஸ்ட்டில் ஆட்டோபேகி செயல்பாடுகள் இருப்பதை மனித செல்களுக்குள் கண்டுபிடிப்பது எப்படி என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. ஆனால் இதனையும் தொடர் பரிசோதனைகள் மூலம் கடந்து கண்டுபிடித்தார் யோஷினேரி ஓஷிமி.
ஆட்டோபேஜி மரபணுக்களின் ஏற்படும் மாற்றங்களே மரபுசார் நோய்களுக்குக் காரணமாகிறது.

நோய்களுக்குக் காரணம்
ஆட்டோபேஜி என்ற செல்கள் தன் உள்ளடக்கங்களை கீழ்நிலைப்படுத்தி மறுசுழற்சி செய்யும் நடைமுறைக்கு ஏற்படும் இடையூறுதான் பார்கின்ஸன் நோய், டைப் 2 நீரிழிவு நோய் உள்ளிட்ட வயது முதிர்ந்தோருக்கான அனைத்து நோய்களுக்கும் காரணம் என்பது தெரியவரவும் யோஷினேரி ஓஷிமியின் கண்டுபிடிப்புதான் காரணம். இந்த ஆட்டோபேஜியில் ஏற்படும் தொந்தரவுகள்தான் புற்றுநோய்க்கும் காரணம். இந்தக் கண்டுபிடிப்பை அடுத்து ஆட்டோபேஜி செயல்பாட்டை நோக்கிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன.

மருத்துவ உலகின் சாதனை
ஆட்டோபேஜி என்பது 50 ஆண்டுகளாக மருத்துவ உலகில் பேசப்பட்டு வருவதுதான். ஆனால் உடற்கூறியல் மற்றும் மருந்துகள் ஆய்வில் இது பெரிய அளவில் தாக்கம் செலுத்தியது யோஷினேரி ஓஷிமியின் பாதை திறப்புக் கண்டுபிடிப்புக்குப் பிறகே என்பதால் அவருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications