வடகொரிய மக்கள் வாயிலிருந்து இனி இந்த வார்த்தை வந்தால்.. அவ்வளவுதான்! கிம் ஜாங் உன்னின் வினோத உத்தரவு
பியாங்யாங்: பல விசித்திரக் கட்டுப்பாடுகள் நிறைந்த வடகொரியாவில் (North Korea Kim Jong Un) புதிதாக வினோத உத்தரவு ஒன்றை அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் பிறப்பித்துள்ளாராம். அதாவது, அந்த நாட்டு மக்கள் குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்த தடை விதித்து இருக்கிறார் கிம் ஜாங் உன். மேற்கத்திய வார்த்தைகள் என வரையறுத்து ஐஸ்கிரீம் உள்ளிட்ட சில வார்த்தைகளுக்கு கிம் ஜாங் உன் தடை விதித்து உள்ளார்.
வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் கிம் ஜாங் உன், அவ்வப்போது அணுகுண்டு சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தி அதிரவைத்து வருகிறார்.

ரஷ்யா சீனாவுடன் மட்டும் நெருக்கம்
இதற்காக அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ள போதிலும் கிம் ஜாங் உன் தனது அடாவடி செயலை நிறுத்துவது இல்லை. சர்வதேச அளவில் சீனா, ரஷ்யாவை தவிர வேறு எந்த நாட்டுடனும் நெருக்கம் காட்டாத வடகொரியா, உலகின் தனிப் பிரதேசமாக உள்ளது. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அந்த நாட்டு மக்களுக்கே வெளிச்சம். மொத்த நாட்டையும் திறந்த வெளி சிறை போல வடகொரியா வைத்துள்ளது.
வெளி உலக தொடர்பு எதுவும் இன்றி அந்த நாட்டு மக்கள் வசித்து வருகிறார்கள். தப்பித்தவறி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தாலும் கடுமையான தண்டனை விதிக்கப்படும். முடிவெடுப்பதில் தொடங்கி மக்களின் பொழுதுபோக்கு வரையிலும் அந்த நாட்டு அதிபரே தீர்மானம் செய்கிறார் என்று சொல்லும் அளவுக்கு அங்கு ஏகத்திற்கும் கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன.
புதிய உத்தரவை பிறப்பித்த கிம் ஜாங் உன்
மேலைநாட்டு படங்களுக்கு தடையும் உள்ளது. இதனை மீறினால் மரண தண்டனை கூட விதிக்கப்படும். சிறிய குற்றங்களுக்கு கூட மிகப்பெரிய அளவில் தண்டனை விதிக்கப்படுவதாகவும் வடகொரியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடப்பதாகவும் பன்னாட்டு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
வடகொரியாவில் என்ன நடக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக தெரியாவிட்டாலும் கூட அவ்வப்போது தென்கொரியா உளவு அமைப்புகள் வெளியிடும் தகவல்கள் வடகொரியாவில் நடக்கும் நிகழ்வுகளை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இந்த நிலையில், புதிய உத்தரவு ஒன்றை கிம் ஜாங் உன் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது
அதாவது, மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என்று வடகொரியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.
அந்த வார்த்தைகள் என்னவென்றால், ஹம்பர்கர், ஐஸ்கிரீம், கரோக்கி உள்ளிட்ட சொற்களை பயன்படுத்தக் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார். வடகொரியாவின் சுற்றுலா வழிகாட்டிகள், இந்த வார்த்தைகளை இனி பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்கு இணையான வேறு சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications