வடகொரியா ஏவுகணை சோதனை... அலறும் தென் கொரியா... தோல்வி என்கிறது அமெரிக்கா
வடகொரியா இன்று காலையில் புதிய ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
சியோல்: அமெரிக்காவை தாக்குவோம் என்று கூறி அச்சுறுத்தி வரும் வடகொரியா இன்று காலையில் புதிய ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபையும் கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை.
அலட்டிக் கொள்ளாத வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய கையோடு இதுதான் அமெரிக்காவுக்கான சுதந்திர தின பரிசு எனக்கூறி சீண்டியது. வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருவதால் கொரிய தீபகற்பத்தில் போர் மேகங்கள் சூழ்ந்தன.
அமெரிக்காவையும் அதன் அண்டை நாடுகளையும் பாதுகாக்க முழு திறனையும் பயன்படுத்த தயார் என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூறியது அமெரிக்கா. இதனால் அமெரிக்கா வடகொரியா இடையேயான போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது.

மீண்டும் ஏவுகணை சோதனை
தற்போது, போர்பதற்றம் சற்றே தணிந்துள்ள நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. வடகொரியாவின் காங்வான் மாகாணத்தில் இருந்து இன்று காலை செலுத்தப்பட்ட ஏவுகணை 250 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து கடலில் விழுந்துள்ளதாக தென்கொரிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குவாம் தீவுக்கு குறிவைப்பு
நிலைமையை உற்று கவனித்து வருவதாக தெரிவித்துள்ள தென்கொரிய ராணுவ அதிகாரிகள் இந்த ஏவுகணை குவாம் தீவை குறி வைத்து ஏவப்பட்டதாக சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். கொரிய தீபகற்பம் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளதால் குவாம் தீவை ராணுவ தளமாக அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஏவுகணை சோதனை தோல்வி
வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைகள் தோல்வியடைந்ததாக அமெரிக்கா கூறியுள்ளது. வடகொரியாவின் கிட்டயராங் பகுதியில் இருந்து மூன்று ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.

எல்லாமே புஸ்வானம்
அந்த ஏவுகணைகளில் முதலாவது மற்றும் மூன்றாவது சோதனை செய்யப்பட்ட ஏவுகணைகள், பறக்க தவறியதாவும், இரண்டாவது சோதனை செய்யப்பட்ட ஏவுகணை, ஏவப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்து சிதறியதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications