வடகொரியாவில் கொரோனாவுக்கு முதல் பலி! 1.87 லட்சம் பேருக்கு தனிமை சிகிச்சை! கிம் ஜாங் உன் அதிர்ச்சி
சியோல்: வடகொரியாவில் 2 நாட்களுக்கு முன்பு முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நபர் பலியாகி உள்ளார். மேலும், நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 87 ஆயிரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் கிம் ஜாங் உன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
Recommended Video
வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இங்கு நடக்கும் பல்வேறு விஷயங்கள் வெளியுலகிற்கு தெரிவது இல்லை. இதனால் வடகொரியா மர்மதேசமாக அறியப்படுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளையும் கண்டுகொள்ளாமல் கிம் ஜாங் உன் தொடர்ச்சியாக அணுஆயுதம், ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறார்.
வட தமிழகத்தில் மழை.. ஊட்டியில் கடும் குளிர்.. நெல்லையில் வாட்டும் வெயில்.. விதவிதமாக வாட்டும் வானிலை
வடகொரியாவை நெருங்காத கொரோனா
இந்நிலையில் 2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020 ஜனவரியில் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை முடக்கியது. ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கினர். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் பரவியது. இருப்பினும் சீனாவில் அண்டை நாடாக இருந்தாலும் கூட வடகொரியாவில் பாதிப்புகள் இல்லை என கிம் ஜாங் உன் கூறி வந்தனர்.இதை தான் உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்தது. அதாவது அதன் தினசரி பாதிப்பு பட்டியலிலும் வடகொரியாவில் கொரோனா பாதிப்பு, இறப்பு பூஜ்ஜியம் என்றே இருந்தது.
முதல் பாதிப்பு
இந்நிலையில் தான் 2 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். தலைநகர் பியாங்யாங்க்கில் வசிக்கும் நபர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவருக்கு எப்படி கொரோனா வைரஸ் பரவியது என்பது தெரியவில்லை. இதையடுத்து கிம் ஜாங் உன் அவசரமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாட்டின் எல்லைகளை மூடி அவசர அவசரகால வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையை அமல்படுத்த அறிவுறுத்தினார். இதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்தவர் பலி
இந்நிலையில் வடகொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் இறந்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகளில் இன்று செய்தி வெளியாகி உள்ளது. அதாவது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேர் இறந்த நிலையில் அதில் ஒருவர் ஒமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தார் என கூறப்பட்டுள்ளது.
1.87 லட்சம் பேர் பாதிப்பு
மேலும் நாட்டில் தற்போது வரை 1 லட்சத்து 87 ஆயிரம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து கொள்கின்றனர். மேலும் நாட்டில் ஏப்ரல் மாதம் இறுதியில் காய்ச்சல் பரவல் துவங்கிய நிலையில் மொத்தம் 3.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் ஒரு பகுதியினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருப்பினும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா பரிசோதனை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி சுகாதார ஆய்வாளர்கள் கூறுகையில், ‛‛நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இருக்கலாம் '' என எச்சரித்துள்ளனர்.
தடுப்பூசிக்கு மறுப்பு
வடகொரியாவில் மொத்தம் 25 மில்லியன்(ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்) மக்கள் உள்ளனர். இன்னும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. உலக சுகாதார நிறுவனம், சீனா, ரஷ்யா நாடுகள் வழங்குவதாக கூறிய தடுப்பூசிகளையும் வடகொரியா ஏற்க மறுத்துவிட்டது. கொரோனா தடுப்பில் தடுப்பூசிகள் முக்கிய பங்காற்றும் என சுகாதார நிபுணர்கள் கூறும் நிலையில் வடகொரியா மக்கள் இன்னும் அதை செய்யவில்லை. இதனால் வைரஸ் பரவலை முதற்கட்டமாகவே தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வடகொரியாவுக்கு ஆபத்து நேரிடலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.