சீனாவுக்கே விபூதி அடித்ததா வடகொரியா.. 2 மணி நேரம் காத்திருந்தும் வராத விமானம்.. என்னாச்சு
பீஜிங்: சீனாவின் பீஜிங் விமான நிலையத்துக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியா விமானம் வருவதாக இருந்தது. இதனால் சர்வதேச பயணிகள் பலரும் ஆர்வமுடன் அந்த விமானத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கான காரணமும் தெரியாமல் மர்மம் நீடிக்கிறது.
உலகின் மர்ம தேசமாக அறியப்படும் நாடு வடகொரியா... வெளி உலக தொடர்பு இன்றி நாட்டு மக்களை இரும்புத்திரை போட்டு அந்த நாட்டை கிம் ஜாங் உன் வைத்து இருக்கிறார். அதுவும் கொரோனாவுக்கு பிறகு தனது எல்லைகளை முற்றிலுமாக வடகொரியா மூடிக்கொண்டது. சர்வதேச நாடுகளுக்கு செல்லும் விமானங்களையும் அந்ந நாடு முற்றிலும் நிறுத்தியது.

உலக நாடுகளில் எல்லாம் கொரோனா குறைந்து விமான போக்குவரத்து சீரான போதும் வடகொரியா மட்டும் தொடர்ந்து விமான போக்குவரத்தை தொடங்காமல் இருந்தது. இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வடகொரியாவில் இருந்து கமர்ஷியல் விமானம் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வடகொரியாவில் இருந்து வெளிநாடுக்கு புறப்படும் விமானம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த விமானம் வருவதாக இருந்தது. ஏர் கொர்யோ (Air Koryo) J5151 என்ற விமானம் பியாங்யாங் நகரில் இருந்து வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சீனாவிற்கு காலை 9.05 மணிக்கு இந்த விமானம் வருவதாக திட்டமிடப்பட்டு இருந்ததால் பத்திரிகையாளர்கள் விமான நிலையத்தில் திரண்டு இருந்தனர்.
விமானத்திற்கு வரும் பயணிகள் மத்தியில் கூட எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 2 மணிநேரம் ஆகியும் விமானம் வரவில்லை. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்துக்கிடந்த பத்திரிக்கையாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. மூன்று ஆண்டுகளாக வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இன்றி வசித்து வரும் வடகொரிய பயணிகள் விமானம் வருவதாக கிடைத்த தகவலால் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
எப்படியும் வந்துவிடும் என்று சீனாவின் பெய்ஜிங் விமான நிலையத்தில் காத்திருந்த பன்னாட்டு விமான பயணிகள் மத்தியில் ஆர்வம் தொற்றிக் கொண்டு இருந்தது. ஆனால், ஏர் கொரியா விமானம் ரத்து செய்யப்படுவதாக திடீரென விமான நிலைய அறிவிப்பு பலகையில் ஓடியது. இது அவர்களுக்கு கடும் ஏமாற்றத்தை கொடுத்தது. விமானம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதனால், வடகொரியாவில் என்னதான் நடக்கிறது என்ற மர்மம் அகன்ற பாடில்லை. வடகொரியாவின் விமானம் ரத்து ஆனதற்கான காரணம் குறித்து சீன வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, பெய்ஜிங் - பியாங்யாங் இடையேயான விமான போக்குவரத்து தொடங்குவதற்கான அனுமதி உள்ளிட்ட விவரங்கள் பற்றி மட்டுமே தெரியும் என்றும் விமானம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரியாது எனவும் கை விரித்தனர்.
இதையடுத்து, பெய்ஜிங்கில் உள்ள வடகொரியா விமான நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு கிடந்த சோஃபா ஒன்றில் குறட்டை விட்டு ஒருவர் தூங்கிக் கொண்டு இருந்தார். கதவை தட்டிய சிறிது நேரத்தில் உள்ளிருந்து வந்த ஒரு ஊழியர் எங்களுக்குமே எதுவும் தெரியாது எனக் கூறியபடி உள்ளே சென்று விட்டார்.












Click it and Unblock the Notifications