லெபனான் பிரதமர் ராஜினாமா.. பெய்ரூட் வெடிப்பு மட்டுமா காரணம்? நோ சான்ஸ்.. மேட்டரே வேறு.. ரொம்ப மோசம்
பெய்ரூட்: லெபனான் நாட்டில் பிரதமர் உட்பட மொத்த அமைச்சரவையும் நேற்று கூண்டோடு ராஜினாமா செய்து பதவி விலகி உள்ளது. பெய்ரூட்டில் நடந்த அமோனியம் நைட்ரேட் வெடி விபத்தும் அதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களும்தான் இந்த பதவி விலகலுக்கு காரணம் என்று கூறப்பட்டாலும் இதன் பின்னணி நீண்ட நெடியது.
Recommended Video
லெபனான் நாட்டில் முறைகேடுகள், ஊழல், நிர்வாக சீர்கேடுகள் தலைவிரித்து ஆடுகின்றன. அங்கு அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள் கொடிகட்டி பறக்கலாம் என்ற நிலை உள்ளது.
நாட்டின் முக்கால்வாசி கடற்கரை பகுதிகள் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளன.

20 மணி நேரம் மின்சாரம் இல்லை
லெபனான் நாட்டின் சில பகுதிகளில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பின்மை, ஊழல், நிர்வாகக் குறைபாடு போன்றவை தொடர்ந்து மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இதற்கு நடுவேதான், பெய்ரூட்டில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது.

பெய்ரூட் வெடி விபத்து
பெய்ரூட் வெடி விபத்தால், சுமார் 3000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். பல வணிக வளாகங்கள் தரைமட்டமாகி உள்ளன. இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் வணிக நிறுவனங்களை அவர்களால் மீட்டெடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே அவர்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர் தொடர்ந்து போராட்டங்களை சந்தித்து வரும் லெபனான் நாட்டில், பெய்ரூட் வெடிப்பு எரிமலையாக வெடித்துக் கிளம்பி விட்டது.

ஆட்சி மாறியது, காட்சி மாறவில்லை
கடந்த ஜனவரி மாதம் லெபனான் பிரதமராக பதவிக்கு வந்தார் ஹசன் தியாப். ஆட்சி மாறியதே தவிர காட்சி மாறவில்லை என்பதுதான் லெபனான் நிலவரம். அதே அரசியல் கட்சிகள்.. அதே மாதிரி ஊழல்கள்..! பிரதமர் வேண்டுமானால் மாறலாமே தவிர நிலைமை மாறவில்லை என்பதுதான் லெபனான் மக்களின் நெடுங்கால கூக்குரலாக இருந்து வந்தது. இப்போதும் அதில் மாற்றமில்லை. 2018ம் ஆண்டு லெபனான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. சாத் ஹரிரி பிரதமராக பதவி வகித்தார். அப்போதும் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக மக்கள் வெடித்துக் கிளம்பினர். எனவே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அவர் பதவி விலகினார். பின்னர் கடந்த ஜனவரியில் ஹசன் தியாப் பதவியேற்றார். பெய்ரூட்டின் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஆனால், காட்சி மாறவில்லையே.

எரிமலை போல கோபம்
எனவேதான், பெய்ரூட் நகரில் நடந்த இந்த வெடிப்பு மக்கள் மனதில் தேக்கி வைத்த அந்த கோபத்தையும் எரிமலைபோல வெடிக்கச் செய்து விட்டது. அதிகப்படியாக தேக்கப்படும் தண்ணீர் அணையை உடைத்துக்கொண்டு எப்படி சீறிப் பாய்ந்து வருமோ, அப்படி லெபனான் நாட்டு வீதிகளில் நடந்து வந்த போராட்டம், இப்போது புரட்சியாக வெடித்து கிளம்பியது.

திருப்தியில்லை
இந்த நிலையில்தான் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை சகாக்கள் அனைவரும் பதவியிலிருந்து விலகி உள்ளனர். ஆனால், போராட்டக்காரர்களுக்கு இதில் திருப்தியில்லை. அரசுகள் போவதும் மற்றொரு அரசு வருவதும் தங்கள் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை. இது தங்கள் நோக்கமும் இல்லை என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

பிரதமர் முக்கியமில்லை
இதுபற்றி அகமது முகமது என்ற 27 வயது போராட்டக்காரர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் அளித்த பேட்டியில், பிரதமர் பதவி விலகியதால் எந்த பலனும் கிடையாது. அதிபர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் பதவி விலகுவதே எங்கள் நோக்கம். அடுத்த சில நாட்களில் அதை நாங்கள் செய்தே தீருவோம் என்கிறார் ஆவேசத்துடன்.

உள்நாட்டு போர்
லெபனான் நாட்டில் பல்வேறு இனக் குழுக்களும் மதகுக்குழுக்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் சுமார் 15 குழுக்கள் முக்கியமானவை. 1975 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 15 ஆண்டுகள் உள்நாட்டு போரை எதிர்கொண்டு சிக்கி சின்னாபின்னமானது லெபனான். சிரியாவும் உள்ளே வர நிலைமை மேலும் மோசமானது. இதன் பிறகுதான் இனக்குழுக்கள் நடுவில் இணக்கம் ஏற்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஒரு கிறிஸ்தவராக இருக்க வேண்டும், பிரதமர் சன்னி பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியராகவும், சபாநாயகர் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியராகவு் இருக்க வேண்டும் என்று அங்கு உடன்படிக்கை செய்யப்பட்டது.

அரசியல் மாற்றம்
எந்த ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், அனைத்து பிரிவினரும், ஊழல் விஷயத்தில் ஒன்றாக இணைந்து கொள்வதாக குற்றம்சாட்டுகின்றனர் மக்கள். கடந்த மார்ச் மாதத்தில், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், லெபனான் நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக வெளிநாட்டு பத்திரங்களுக்கான 1.2 பில்லியன் டாலரை செலுத்த முடியாமல் போனது. லெபனான் அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 10 பில்லியன் டாலர் உதவியை நாடுவதாக கூறினார் பிரதமர். ஆனால் பல சுற்று பேச்சுவார்த்தைகள் ஒரு உடன்பாட்டை எட்ட முடியவில்லை, உதவி வரவில்லை. லெபனான் பணம் 80% மதிப்பை இழந்துள்ளது. எனவே, ஆட்சி மாற்றம் அவசியமில்லை.. அரசியல் மாற்றம்தான் தேவை என வீதிகளுக்கு வந்துள்ளனர் லெபனான் மக்கள்.
-
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
லாஸ்ட்டில் ராமதாஸ் "இவருடன்" கூட்டணியா? வடக்கையும் தெற்கையும் அதிரவைக்கும் அரசியல்வாதி யார்? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
மகளிர் உரிமை தொகை டூ விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் வரை.. 10 வாக்குறுதிகளை கொடுத்த மம்தா பானர்ஜி! -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications