ஜெர்மனி மட்டுமல்ல... உலகத்தின் பார்வையே இந்தியா பக்கம் தான் உள்ளது: மோடி
பெர்லின்: ஜெர்மனி மட்டுமல்ல உலகத்தின் பார்வையே இந்தியா பக்கம் உள்ளதாகவும், இந்தியா சிறந்த உற்பத்தி மையமாவதற்கு மிகுந்த சாத்தியம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மோடி. மேலும், இதற்காக பெருமுயற்சி எடுத்து வரும் இந்தியாவுடன் கரம்கோக்கும்படி உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
எரிசக்தி, பொருளாதார வளர்ச்சி இரண்டையும் நோக்கமாக கொண்டு பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, ஜெர்மனி சென்ற மோடி, ஹனோவர் நகரில் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சியில் இந்தியா சார்பில் அமைக்கப் பட்டுள்ள அரங்கை, அந்நாட்டு பிர்தமர் ஏஞ்சலா மெர்கலுடன் இணைந்து தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற இந்திய- ஜெர்மன் வர்த்தகர்கள் மாநாட்டில் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் மாற்றம்...
முந்தைய அனுபவங்கள் அடிப்படையில், இந்தியா தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று ஜெர்மன் வர்த்தகர்களையும், தொழிலதிபர்களையும் கேட்டுக் கொள்கிறேன். அதற்குப் பதிலாக இந்தியாவுக்கு நீங்கள் வர வேண்டும். அப்போது இந்தியாவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

நீண்டகால நோக்கில்...
இந்தியா, தற்போது மாறிவிட்டது. இந்திய நெறிமுறைகள், தற்போது அதிக அளவு வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, நிலைத்தன்மை கொண்டதாக உள்ளன. இந்த விவகாரங்களில், நீண்டகால நோக்கில் எனது அரசு செயல்பட்டு வருகிறது.

திருத்தங்கள் மேற்கொள்வோம்...
உலக அளவில் இந்தியாவை சிறந்த உற்பத்தி மையமாக்குவது தொடர்பான எங்களது பயணமானது, எங்கள் நாட்டின் விதிகள் மற்றும் நெறிமுறைகளால் பாதிக்கப்படாது என்று நம்புகிறோம். எங்கெல்லாம் முதலீட்டுக்கு உகந்த திருத்தங்கள் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் திருத்தங்களை மேற்கொள்வோம்.

முதலீடு செய்ய அழைப்பு...
"இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்' என்று உங்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவில் நீங்கள் முதலீடு செய்தால், உங்களுடைய வெற்றியில் தனிப்பட்ட முறையில் நானும் அக்கறை செலுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன். இந்தியாவில் எளிதில் வர்த்தகம் செய்வதற்கு வசதியாக எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிக்கலான நடைமுறைகளை குறைத்தது, போர்க்கால அடிப்படையில் படிவங்கள், வடிவங்களை எளிமைப்படுத்தியது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

சீரமைப்பு...
இந்தியாவில் நேரடி அன்னிய முதலீட்டை ஈர்க்கும் வகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கவலை தரும் பல்வேறு விவகாரங்களை எனது அரசு சீரமைத்துள்ளது. பல்வேறு பிற்போக்கான வரிகள் விதிக்கும் முறைகளை நீக்கியுள்ளது.

வர்த்தகத்துக்கு உகந்த சூழல்...
எனது அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டிலேயே, பிற்போக்கான வரி விதிப்பு முறை தொடராது எனத் தெரிவித்திருந்தோம். அதுபோன்ற பிரச்னை மீண்டும் எழுந்தால், அதுகுறித்து உயர்நிலை அளவில் ஆய்வு செய்யப்படும். இந்தியாவில் வர்த்தகத்துக்கு உகந்த சூழ்நிலையை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து எனது அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வரி விதிப்பு முறையில் ஊகிக்கத்தக்க, வெளிப்படைத் தன்மைக் கொண்ட முறையை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

விரைந்து ஒப்புதல்...
தொழில், உள்கட்டுமானத் துறைகள் தொடர்பான திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில், சுற்றுச்சூழல் தொடர்பான ஒப்புதல்கள், தொழில் நிறுவனங்களுக்கான உரிமங்கள் நீட்டிப்பு, பாதுகாப்பு சாதனங்களுக்கான உரிமக் கட்டுப்பாடுகளை ரத்து செய்தல், வெளிநாடுகளுடனான வர்த்தகத்தை எளிமைப்படுத்துதல் ஆகியவையும் அடங்கும்.

நேரடி அன்னிய முதலீடு...
இதுபோன்ற நடவடிக்கைகள், இந்தியாவில் முதலீடு செய்வோரின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதனால், 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நேரடி அன்னிய முதலீட்டு அளவு 36 சதவீதம் அதிகரித்துள்ளது.

நல்லுறவு...
இந்தியா - ஜெர்மனி இடையே துடிப்பான நல்லுறவு உள்ளது. இருப்பினும், இந்தியாவில் ஜெர்மனியின் முதலீடானது, ஜெர்மனியில் இந்தியா செய்யும் முதலீட்டை விட குறைவாக உள்ளது. இந்தியாவில் உற்பத்தி துறை, உள்கட்டுமானம், திறன் மேம்பாடு ஆகிய துறைகள் ஜெர்மனி முதலீடு செய்வதற்கு உகந்த துறையாக உள்ளன. இந்தத் துறைகளில் ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார் மோடி.

உலகத்தின் பார்வை...
முன்னதாக, ஹனோவர் கண்காட்சியில் இந்திய அரங்கை தொடக்கி வைத்த மோடி, ‘ஜெர்மனி மட்டுமல்ல, உலகத்தின் பார்வை முழுவதும் இந்தியா மீதுதான் தற்போது உள்ளது. உலக அளவில் இந்தியா சிறந்த உற்பத்தி மையமாவதற்கு மிகுந்த சாத்தியம் உள்ளது. இதற்காக பெருமுயற்சி எடுத்து வரும் இந்தியாவுடன் கரம்கோக்கும்படி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்' என்றார்.

புதிய சகாப்தம்...
இந்த விழாவில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் பேசுகையில், "ஹனோவர் கண்காட்சி, இந்தியா - ஜெர்மனி இடையேயான உறவில், புதிய சகாப்தத்தை தொடங்கும் என நம்புகிறேன். இருநாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜெர்மனி தயாராக உள்ளது' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications