தாய், குழந்தைகளைவிட மோடிக்கே நவாஸ் ஷெரிப் முக்கியத்துவம் தருகிறார்.. இம்ரான் கான் பரபர குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் மோடியுடன், பாகிஸ்தான், பிரதமர் நவாஸ் ஷெரிப் மிகவும் நட்புடன் இருப்பதாக அந்த நாட்டு எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வலியுறுத்தி வருகிற 2ம் தேதி முதல் இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் அறிவித்துள்ளார்.
மேலும் இம்ரான்கான் கூறியதாவது: பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்படுகிறார். அவரது விருப்பங்களை பாகிஸ்தானில் செயல்படுத்தி வருகிறார். லண்டனில் இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அத்தகவலை முதலாவதாக, நரேந்திர மோடிக்குத்தான் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
நவாஸ் ஷெரிப் தனது தாயாருக்கோ, அல்லது தனது குழந்தைகளிடமோ இதுகுறித்து முதலில் தெரிவிக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு ரகசியங்களை பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளியிடுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையிலான தகவல்களை வெளியிட்டதாக தகவல் துறை அமைச்சர் பெர்லைஷ் ரஷீத் சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.