இந்தியா மீது போர் தொடுப்போம்: ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல்
பாக்தாத்: முஸ்லிம்களின் உரிமைகளுக்காக இந்தியா மீது போர் தொடுக்கப்படும் என ஈராக்கில் கிளர்ச்சி செய்து வரும் சன்னி தீவிரவாத அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவன்ட் கிளர்ச்சிப்படை, மிரட்டல் விடுத்துள்ளது.
ஈராக், சிரியா நாடுகளின் நகரங்களை இணைத்து இஸ்லாமிய சட்டத்தின் அடிபபடையிலான தனி நாடை அமைக்க ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சி அமைப்பு கடந்த சில வாரங்களாக ஈராக்கில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் தளபதி இப்ராஹிம் அவாத் அல்- பாத்ரி, உலகலவில் பல்வேறு நாடுகள் மீது ஜிகாத் நடத்த வேண்டும் என்று ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அந்த அமைப்பின் தளபதி, ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இணையத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
"நமது ரமலான் மாதத்தில் எந்த பச்சாதாபமும் இன்றி ஆதரவாளர்கள் அனைவரும் ஆயுதத்துடன் தயாராக வேண்டும்.
இஸ்லாமியர்களின் உரிமைகள் அனைத்தும் சீனா, இந்தியா, பாலஸ்தீனம், சொமாலியா, எகிப்து, ஈராக், இந்தோனேஷியா, ஆப்கான், பிலிப்பைன்ஸ், அவாஸ் மற்றும் ஈரான் போன்ற ஷியா ஆதிக்கம் உள்ள நாடுகளால் சூறையாடப்பட்டுள்ளது. பாகிஸ்தான், துனிசியா, லிபியா, அல்ஜீரியா, மோராக்கோ ஆகிய நாடுகளும் இதே நிலைபாட்டில் தான் உள்ளன.
சிறையில் வாடும் நமது சகோதரர்கள் முணங்குகின்றனர். குழந்தைகளை இழந்து தவிக்கும் தாய்மார்கள் வாடுகின்றனர். விதவைகளும் ஆதரவற்றோர்களும் இந்த நாடுகள் மீது படையெடுக்க வலியுறுத்துகின்றனர்.
இஸ்லாமிய சகோதரர்கள், ஜிகாத் நடத்தப்படும் நாளை நோக்கி காத்திருக்கின்றனர். உலக அளவில் பரவலாக வாழும் நமது சகோதரர்கள் பலவிதமான இன்னல்களை சந்தித்துவருகின்றனர். அதற்கான பதிலை நாம் விரைவில் காண வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் இருக்கும் அந்த அமைப்பின் ஆதரவாளர்களை சேரும் வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இந்த செய்தி இணையத்தில், ஆங்கிலம், ரஷ்ய, பிரஞ்சு, அல்பேனிய மற்றும் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸின் தலைவராக இப்ராஹிம் பாத்ரியை அந்த அமைப்பு அறிவித்திருந்தது. ஈராக்கில் அந்த அமைப்பு தற்போது போர் நடந்திவரும் நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் முதல் முறையாக இந்தியாவை எச்சரிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர்.
ஈராக்கில் ஏராளமான இந்தியர்கள் ஆங்காங்கே சிக்கியுள்ள நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ், இத்தகைய எச்சரிக்கை விடுத்துள்ளது அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.