அணு உற்பத்திக்கு எதிரான போராட்டம்: கன்னியாஸ்திரிக்கு 3 ஆண்டு சிறை!
வாஷிங்டன்: அணு உற்பத்திக்கு எதிராக போராடிய 84 வயது கன்னியாஸ்திரிக்கு அமெரிக்க நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்காவின் டென்னெஸ்ஸீ மாநிலத்தில் அணு உற்பத்திக்கு தேவையான யுரேனியம் சேமித்து வைக்கும் அரசு கிடங்கு உள்ளது. அங்கு, வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படும் சக்தி வாய்ந்த உயர்தர யுரேனியம் சேமித்து, பாதுகாக்கப்படுகின்றது.
பலத்த பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதிக்கு கடந்த 28-07-2012 அன்று அணு உற்பத்திக்கு எதிராக போராடும் அமைதிக் குழுவை சேர்ந்த மெகன் ரைஸ் என்ற கன்னியாஸ்திரி உள்பட 3 பேர் சென்றனர். அங்கிருந்த முள்கம்பி வேலிகளை வெட்டி விட்டு உள்ளே நுழைந்த அவர்கள், யுரேனியம் சேமிப்பு கிடங்கின் வாசற்பகுதியில் நின்று சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன் பின்னர், அணு உற்பத்திக்கு எதிரான பிரசார வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், பேனர்களையும் வாசலில் தொங்கவிட்ட போராட்டக் குழுவினர், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அந்த கிடங்கின் சுவற்றின் மீது ரத்தத்தை ஊற்றினர்.
இதையடுத்து, பாதுகாப்பு மிகுந்த அரசு சொத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி மெகன் ரைஸ் (84)க்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், மற்ற இருவருக்கும் 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications