கொடூரம்: போர் அடித்ததால் 106 நோயாளிகளை கொலை செய்த நர்ஸ்
பெர்லின்: ஜெர்மனியில் நர்ஸ் ஒருவர் போர் அடித்ததால் விஷ ஊசி போட்டு 106 நோயாளிகளை கொலை செய்துள்ளார்.
ஜெர்மனியை சேர்ந்தவர் நீல்ஸ் ஹோகல்(41). அவர் 1999ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை இரண்டு மருத்துவமனைகளில் நர்ஸாக இருந்துள்ளார்.
ப்ரிமென் நகரில் இருக்கும் டெல்மென்ஹோர்ஸ்ட் மருத்துவமனையின் ஐசியு பிரிவில் இருந்த 2 நோயாளிகளை நீல்ஸ் கொன்றது, 4 பேரை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டு 2015ம் ஆண்டில் நிரூபிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க விசாரிக்க ஏகப்பட்ட தகவல்கள் வெளி வருகின்றன. நீல்ஸ் 106 நோயாளிகளை விஷ ஊசி போட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது. அவர் மேலும் பல நோயாளிகளை கொலை செய்திருக்கக்கூடும் என்று போலீசார் அஞ்சுகிறார்கள்.
இது குறித்து நீல்ஸ் விசாரணையில் கூறியிருப்பதாவது,
இதய செயல் இழப்பு அல்லது மொத்தமாக உடல் செயல் இழப்பை ஏற்படுத்தக் கூடிய மருந்தை ஊசி மூலம் நோயாளிகளுக்கு ஏற்றினேன். அவர்களை காப்பாற்றவும் முயன்றேன். காப்பாற்றினால் பிற நர்ஸுகளை விட நான் திறமையானவன் என்ற பெயர் கிடைக்கும் என்று செய்தேன்.
போர் அடித்ததால் நோயாளிகளுக்கு விஷ ஊசிபோட்டேன். அவர்களும் இறந்துவிட்டார்கள் என்றார்.
2005ம் ஆண்டு நோயாளி ஒருவருக்கு நீல்ஸ் விஷ ஊசி போட முயன்றதை பார்த்த பெண் நர்ஸ் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதன் பிறகே நீல்ஸின் கொடூர செயல்கள் பற்றி தெரிய வந்தது.