பொருளாதாரத்தில் வலிமை பெற்று திகழும் அமெரிக்கா - நாடாளுமன்ற இறுதி உரையில் ஒபாமா பேச்சு
வாஷிங்டன்: அமெரிக்கா பெரும் வலிமை பெற்ற நாடாகத் திகழ்கின்றது. எனினும், உலகில் துப்பாக்கியால் நிகழும் வன்முறைகளில் இருந்து நம் குழந்தைகளை காக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் தனது கடைசி உரையில் ஒபாமா இதனை தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையெட்டி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர் ஒபாமா உரையாற்றினார்.
முன்னதாக இத்தகைய இறுதிக்கட்ட உரையைக் கேட்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்த்து முக்கிய பிரமுகர் களுக்கு, தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அவருடைய உரையில், "உலகின் மிகவும் வலிமையான பொருளாதார நிலையில், அமெரிக்கா உள்ளது என குறிப்பிட்ட ஒபாமா, சமமான வேலைக்கு சமமான ஊதியம், குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் அமெரிக்காவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. குற்றவியல் நீதியில் சீர்திருத்தம் போன்ற சிலவற்றிற்கு முக்கியத்துவம் அளித்த இந்த ஆண்டு அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் என நம்புகிறேன். அடுத்த ஆண்டு என்ன செய்ய வேண்டும் என்பதில் என் கவனம் இல்லை. அடுத்த 5 ஆண்டுகளில், 10 ஆண்டுகளில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் நான் கவனம் செலுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.