'அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவேன்..'! - எதிர்காலத் திட்டம் பற்றி ஒபாமா!
சிகாகோ(யு.எஸ்) அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து இறங்கிய பிறகு சுமார் நான்கு மாதங்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் ஓய்வில் இருந்தார் ஒபாமா.
ஒய்வை முடித்துக் கொண்டு நேற்று சிகாகோவில் முதன் முறையாக முன்னாள் அதிபர் ஒபாமா பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சிகாகோ பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியாக இருந்தது. மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

முன்னாள் அதிபராக, அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதற்கு பாடுபடுவேன் என்று கூறினார்.
இளைஞர்கள் பொதுவாழ்க்கையிலும் அரசியலிலும் ஈடுபட வாருங்கள் என்று அழைப்பும் விடுத்தார்.
இளம் தலைவர்களை உருவாக்கி விட்டால், சூழலுக்கு ஏற்ப தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வல்லமையை அவர்களேப் பெற்றுக் கொள்வார்கள்.என்றார்.
தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமான முடிவு எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக களம் இறங்கப் போவதாகவும் கூறினார்.
குற்றவியல் சட்டங்களை சீரமைக்கும் பணியிலும் , அரசியலில் பணம் விளையாடுவதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.அதிபர் ட்ரம்பைப் பற்றி ஒபாமா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
மாறிவரும் தகவல் தொழில் நுட்ப உலகத்தில், அரசியலில் மீடியாவின் பங்கு எப்படி இருக்கும் என்றும் பேசினார். உடனுக்குடன் அனைத்து தகவல்களும், படங்களும், வீடியோக்களும் ஆன்லைனில் பகிர்ந்துக் கொள்ள்படுவது, அரசியல் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களுக்கு சவாலான விசயமாகும்;
பள்ளிக்காலத்தில் நான் செய்தவைகளை எல்லாம் படங்களாக வெளியிட்டு இருந்தால், நான் அதிபராக ஆகி இருக்க மாட்டேன் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
புதிய அவதாரம் எடுத்துள்ள ஒபாமாவின் தலையில் வெள்ளை முடி சற்று அதிகமாகவே காணப்படுகிறது. கிட்டத்தட்ட முழு வெள்ளை போலவே ஆகிவிட்டாலும் தலைக்கு சாயம் பூசவில்லை.
மாணவர்களுடனான உரையாடலில் ஒரு பொறுப்பான ஆசிரியர் போலவே ஒபாமா நடந்து கொண்டார் அதே வேளையில் அனைவருடனும் எளிமையாகப் பழகிப் பேசி, தோளில் தட்டி நட்பு பாராட்டி சாதாரண மனிதராகவே தன்னைக் காட்டிக் கொண்டார்.
-இர தினகர்












Click it and Unblock the Notifications