88 ஆண்டுகளுக்கு பிறகு கியூபாவில் அமெரிக்கா அதிபர்.... ஒபாமாவுக்கு உற்சாக வரவேற்பு!!
ஹவானா: அமெரிக்கா அதிபர் ஒபாமா வரலாற்று சிறப்புமிக்க பயணமாக கியூபா சென்றடைந்துள்ளார். கியூபா தலைநகர் ஹவானாவில் ஒபாமாவுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 88 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா அதிபர் ஒருவர் கியூபா செல்வது இதுவே முதல் முறை.
அரை நூற்றாண்டுகாலமாக அமெரிக்காவும் கியூபாமாவும் பகை நாடுகளாக இருந்து வந்தன. கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய பிடல் காஸ்ட்ரோவின் நடவடிக்கையை அமெரிக்கா விரும்பாமல் இருந்தது.

இதனால் கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்து வந்தது அமெரிக்கா. அத்துடன் பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்யவும் நூற்றுக்கணக்கான முறை அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. முயற்சித்திருந்தது.
இருப்பினும் கியூபாவின் சோஷலிச அரசு அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிற்கிறது. இதனால் தோற்றுப் போன அமெரிக்கா கியூபாவுடனான மோதல் போக்கை முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கியூபாவுக்கு நட்புக் கரம் நீட்டினார் ஒபாமா.
கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகளிடையே நட்பு மலர் பூத்தது. கியூபா மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்பட்டன. இருநாடுகளும் அரசியல் கைதிகளை விடுவித்தன.
இதில் தற்போது வரலாற்று சிறப்புமிக்க பயணமாக கியூபா சென்றடைந்துள்ளார் ஒபாமா. 88 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் அதிபர் ஒருவர் கியூபா செல்வது இதுவே முதல் முறையாகும்.
ஹவானா விமான நிலையத்தில் ஒபாமா, மனைவி மிட்செல் ஒபாமா, மகள்கள் ஷாஷா, மைலியா ஆகியோருக்கு செங்கம்பளம் விரித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. கியூபாவுக்கு ஒபாமா சென்று சேர்ந்ததும், கியூபா மொழியில் ஒபாமா தனது ட்விட்டரில், வரலாற்று சிறப்புமிக்க தருணம்... கியூபா வந்து சேர்ந்தேன். கியூபா நாட்டு மக்களை நேரடியாக சந்தித்து பேசுவதை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
கியூபா அதிபர் ராவுல் காஸ்டோரவை ஒபாமா சந்தித்து பேச உள்ளார். இருப்பினும் பிடல் காஸ்ட்ரோவை ஒபாமா சந்திக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications