போர் விமானங்கள் மீது தாக்குதல்: தெற்கு சூடானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஜூபா: தெற்கு சூடானில் அமெரிக்க போர் விமானங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீரினுக்கு எதிராக நடக்கும் உள்நாட்டுப் போர் மிக தீவிரமடைந்துள்ளது. ராணுவத்துக்கும் புரட்சி படைக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது.
தெற்கு சூடானில் உள்ள ஜொங்கோலி மாநிலத்தின் அபோக்கோ நகரில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தின் மீது சுமார் 2 ஆயிரம் நுவர் இன தீவிரவாதிகள் கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தினர். நுகர் இன தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவை சேர்ந்த 2 அமைதிப்படையினர் உட்பட மொத்தம் 22 பேர் இந்த தாக்குதலில் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
போர் உச்சத்தை எட்டியுள்ளதால், தெற்கு சூடானில் வாழும் அமெரிக்கர்களை திரும்ப அழைத்து வரருவதற்காக அமெரிக்கா 45 ராணுவ வீரர்களுடன் 3 போர் விமானங்களை அனுப்பியது.
புரட்சிப் படையினரின் பிடியில் உள்ள போர் நகரத்தில் அமெரிக்க விமானங்கள் தரையிறங்க முயன்ற போது, புரட்சிப் படையினர் ஆவேச தாக்குதல் நடத்தினர். இதில் 4 அமெரிக்க வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'ஆயுத பலத்தை பயன்படுத்தி தெற்கு சூடானின் ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்களின் இத்தகைய செயல்பாடுகள் அமெரிக்காவும், சர்வதேச சமுதாயமும் அளித்து வரும் நீண்டகால ஆதரவை இழக்கும் நிலைக்கு தெற்கு சூடானை தள்ளிவிடும்' என அவர் எச்சரித்துள்ளார்.
'ஜுபா மற்றும் போர் பகுதிகளில் வசிக்கும் எங்கள் நாட்டினரை திரும்ப அழைத்துக் கொள்ளும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு தெற்கு சூடான் தலைவர்களுக்கு உண்டு 'என்றும் ஒபாமா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications