எரியும் படகைத் தேடி அலைந்த மீட்புப்படையினர்... பொய் தகவல் கூறிய விமானிக்கு ரூ.3 கோடி அபராதம்
நியூயார்க்: ஏரி ஒன்றின் நடுவில் படகு ஒன்று எரிந்து கொண்டிருப்பதாக பொய்த்தகவல் கூறி சுமார் 21 மணி நேரம் மீட்புப்படையினரை அலைக்கழித்த விமானி ஒருவருக்கு ரூ 3 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
அமெரிக்காவை சேர்ந்த விமானி டேனிக் குமார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம், கிளீவ்லேண்ட் அருகே ஏரி ஒன்றின் மீது விமானத்தில் பறந்தபோது ஒரு படகு தீப்பிடித்து எரிவதைக் கண்டதாக அமெரிக்க அதிகாரிகளிடம் ஒரு பரபரப்பு தகவலளித்தார்.
டேனிக்கின் தகவலைத் தொடர்ந்து கடலோர காவல்படை படகு, 3 சிறிய மீட்பு படகுகள், ஒரு மீட்பு ஹெலிகாப்டர், கனடா விமானம் ஆகியவற்றை ஈடுபடுத்தி, சுமார் 21 மணி நேரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள். ஆனால் படகைக் கண்டுபிடிக்க அவர்களால் முடியவில்லை.
இந்நிலையில், ஒரு மாதம் கழித்து தான் சொன்ன தகவல் பொய் எனத் தெரிவித்தார் டேனிக். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிகாரிகள், பொய்த் தகவல் கூறியதாக டேனிக் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
விசாரணையில் டேனிக் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப் பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ரூ.2 கோடியே 96 லட்சத்து 53 ஆயிரம் (4,89,000 டாலர்) அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.