ஈரான் போர் வேலையை காட்டியது.. 4 வருட உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை.. 127 டாலர் கதிகலங்கி நிற்கும் இந்தியா!
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத உயர்வைப் பதிவு செய்துள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 124 டாலருக்கு அருகில் சென்றுள்ளது. இன்று ஒரே நாளில் அதிகப்படியாக 6 சதவீத உயர்வு பதிவாகியுள்ளது, இது 2022 பிறகு பதிவான அதிகப்படியான விலையாகும். அதேசமயம், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) 109 டாலருக்கு மேல் சென்றுள்ளது. சந்தை நிபுணர்கள் அமெரிக்கா - ஈரான் இடையேயான பிரச்சனை விரைவில் தீராது என்பதே இந்த விலை உயர்வு தெளிவாகக் காட்டுவதாகக் கூறுகின்றனர்.

அமெரிக்கா தீர்க்கமான முடிவு
கச்சா எண்ணெய் விலையில் இன்று பதிவான உயர்வுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் முடிவு தான். டொனால்ட் டிரம்ப், ஈரான் துறைமுகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடற்படைத் தடையை ஈரான் ஒரு விரிவான அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொள்ளும் வரை தொடரும் என அறிவித்துள்ளார்.
மேலும், ஈரான் தொடர்புடைய எண்ணெய் டேங்கர்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முழுமையாகத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தை மொத்தமாக முடக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
ஈரான் எதிர்ப்பு
ஈரான் அரசு, அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள், ஹார்முஸ்-ல் தடை தொடர்ந்தால் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். அமெரிக்கா பொருளாதார நெருக்கடி மூலம் ஈரானை சரணடைய வைக்க முயல்வதாகவும், தாங்கள் அதை எதிர்க்கத் தயாராக இருப்பதாகவும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச எரிசக்தி அமைப்பு (IEA) இந்த நிலையை நவீன வரலாற்றில் மிகப் பெரிய விநியோக பாதிப்பு என விவரித்துள்ளது. வைட்டால் குழுமம், சுமார் 1 பில்லியன் பேரல் அளவிலான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என மதிப்பிட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறை தான் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வர்த்தக சந்தை
ஜூன் மாத Brent crude பியூச்சர்ஸ் ஒப்பந்தத்தின் வர்த்தக அளவு குறைவாகவே உள்ளது, ஏனெனில் அது இன்றைய வர்த்தகத்தில் முடிவில் காலாவதியாக உள்ளது. இதன் காரணமாகவும் சில வர்த்தகர்கள் அதன் விலையை உயர்த்தி லாபம் பார்த்து வருகின்றனர். இதற்கிடையில், அதிகமாக பரிவர்த்தனை செய்யப்படும் ஜூலை மாத ஒப்பந்தம் ஒரு பேரலுக்கு 111 டாலரை கடந்துள்ளது. புதன்கிழமையிலும் இது ஜூன் 2022க்கு பிறகு இல்லாத உயர்ந்த நிலையில் முடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தை
ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடுமையான பாதிப்பு உருவாகியுள்ளது. தற்போது பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.14 இழப்பிலும், டீசல் ரூ.18 இழப்பிலும் சுத்திகரிப்பு நிறுவனங்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மொத்தமாக ரூ.80,000 கோடி வரை பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிடிவாதம் டூ பொருளாதாரம்
இந்த நெருக்கடிக்கு விரைவான தீர்வு இல்லை என்பது தான் தற்போதைய மிகப்பெரிய கவலை. அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் ஈரான் சரணடையும் என நம்புகிறது. ஆனால் ஈரான் தனது பிரச்சனைகளைக்கு தொடர்ந்து மாற்று வழிகளை கண்டுப்படித்து வருகிறது. உதாரணமாக பாகிஸ்தானில் இருந்து 3000 கண்டெய்னர்களை ஈரானுக்கு சாலை போக்குவரத்து வழியாக கொண்டு வருவது, ரஷ்யாவில் இருந்து உதவி என தாங்கள் பொருளாதார நெருக்கடியைத் தாங்கி நிற்க முடியும் என நம்புகிறது.
இதனால் இரு தரப்பு மத்தியிலும் பேச்சுவார்த்தைக்கு வழி இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் எண்ணெய் விலை இன்னும் நீண்ட காலம் உயர்ந்து கொண்டே இருக்கும் என சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த மோதலின் மிக முக்கியமான தாக்கம் உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை தான். பிப்ரவரி இறுதியில் போர் துவங்கியதில் இருந்து ஹார்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து முற்றிலும் நின்றுவிட்டது. உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு இங்கு வழியாகத்தான் செல்கிறது. இப்போது இவ்வழித்தடத்தில் சரக்கு போக்குவரத்து என்பது பூஜ்ஜியமாகியுள்ளது. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலி பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது.












Click it and Unblock the Notifications