மாயமான விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தல்: நம்பும் அமெரிக்கர்கள்
நியூயார்க்: மாயமான மலேசிய விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தியிருக்கக்கூடும் என்று சிஎன்என் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய பெருங்கடலில் இரண்டு மாதங்களாக தேடியும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் சிஎன்என் செய்தி தொலைக்காட்சி அமெரிக்கர்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
கருத்துக்கணிப்பு
கருத்துக்கணிப்பில் ஆயிரம் அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் விமானம் பற்றியும், அதில் பயணித்தவர்களின் கதி பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன.
வேற்றுகிரகவாசிகள்
மாயமான மலேசிய விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தியிருக்கக்கூடும் என்று கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பத்தில் ஒருவர் நம்புகிறார்.
பயணிகள்
மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க முடியாது என்று கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 80 சதவீதம் பேர் கருதுகிறார்கள்.
தீவிரவாதிகள்
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியிருக்கக்கூடும் என்று 57 சதவீதம் பேரும், விமானம் மாயமானது தொடர்ந்து மாயமாகவே இருக்கும் என்று 46 சதவீதம் பேரும் நினைக்கிறார்கள்.