"விடை கொடு எங்கள் நாடே.." வேரை பிடுங்கிய போர்.. உக்ரைனில் இருந்து 1 லட்சம் அகதிகள் போலந்தில் தஞ்சம்!
வார்சவ்: உக்ரைனில் இருந்து ஒரு லட்சம் மக்கள் போலந்து நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ளதாக போலந்து அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மூன்று நாட்களாக போர் புரிந்து வருகிறது. உக்ரைனில் பல இடங்களைக் கைப்பற்றிவிட்டது ரஷ்யா. உக்ரைன் தலைநகர் கிவியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் ரஷ்யப் படைகள் முகாமிட்டுள்ளன.
தலைநகர் கிவியில் ஏற்கெனவே வான்வழித்தாக்குதலால் குண்டு மழை பொழிந்து பலத்த சேதத்தை சந்தித்திருக்கிறது. கிவியைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வருகிறது.இதற்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.

வெளியேற்றம்
இந்நிலையில், தலைநகர் கிவி தாக்கப்படுவதால், அங்கிருந்து மக்கள் வெளியேறினார்கள். முதல் நாள் போரின் போதே மக்கள் சாரைசாரையாக கிவியை விட்டு வெளியேறி மேற்கு நோக்கி சென்றார்கள். கிழக்கு மற்றும் கிரிமியா பகுதிகளில் தான் போர் பதற்றம் என்று உக்ரைன் மக்கள் மேற்கு நோக்கி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றார்கள். வாகனங்கள் கிடைக்காததால் பலர் நடந்தே சென்றனர்.

போலந்து
உக்ரைன் தலைநகர் கிவியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என வான், தரை, கடல் என அனைத்து வழிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது கிவியை சுற்றி வளைத்து கைப்பற்றவே ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதனால் மத்திய மற்றும் மேற்கு உக்ரைனும் தாக்குதலுக்கு உள்ளாகும். இதனால் மேற்கு உக்ரைனில் இருந்தவர்களும் அங்கிருந்து வெளியேறி போலந்து நாட்டுக்குச் சென்றுள்ளனர்.

அகதிகள்
உக்ரைன் நாட்டில் இருந்து இதுவரை ஒரு லட்சம் பொதுமக்கள் அண்டை நாடான போலந்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். இதை போலந்து உள்துறை துணை அமைச்சர் பாவெல் செஃபெர்னேக்கர் உறுதிபடுத்தியுள்ளார். உக்ரைனின் வட மேற்கில் இருக்கும் போலந்து நாடு, உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக அடுத்த மாதம் நடக்கவுள்ள 2022 உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது.

விமான பயணம்
உக்ரைனில் வெளிநாட்டு மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். அவர்களில் பலர் போரால் அங்கேயே சிக்கி இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். போர் பயத்தால் சிலர் பதுங்கு குழிகளில் தங்கி உள்ளனர். சிலர், வாகனத்திலோ நடந்தோ போலந்தை அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் போலந்தில் இருந்து விமானம் வழியாக தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பி வருகின்றனர். இதற்கு போலந்து அரசு உதவி வருகிறது.












Click it and Unblock the Notifications