நடுவானில் ‘சேட்டை’ செய்த பயணி... மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய லண்டன் விமானம்!
ஹாங்காங்: ஹாங்காங்கிலிருந்து லண்டன் புறப்பட்ட விர்ஜின் அட்லான்டிக் விமானம், அதில் பயணம் செய்த பயணி ஒருவர் செய்த சேட்டையால் மீண்டும் ஹாங்காங்குக்கே திரும்பி வந்தது.
பேருந்து மற்றும் ரயில்களில் மது போதையால் ரகளை செய்யும் பயணிகளை பாதி வழியில் இறக்கி விடுவார்கள். ஆனால், விமானத்தில் ?. என்ன செய்வது மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து விட வேண்டியது தான். அப்படித் தான் ஹாங்காங்கில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
விஎஸ்201 என்ற அந்த விமானம், லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே, விமானத்தில் பயணம் செய்த 26 வயது பயணி ராபர்ட் என்பவரால் சில சிக்கல்களைச் சந்தித்தது.

கால் போன போக்கிலே...
விமானம் கிளம்பி ஒன்றரை மணி நேரம் கழிந்திருந்த நிலையில், ராபர்ட் யாருடைய பேச்சையும் கேட்காமல் தன் இஷ்டப்படி நடக்க ஆரம்பித்தார். அவரை அமைதியாக இருக்குமாறு விமான ஊழியர்கள் பலமுறை கேட்டுக் கொண்டபோதும் அவர் கேட்கவில்லை. தன் இஷ்டப்படி கத்தினார்.

கைது...
இதையடுத்து விமானம் மீண்டும் ஹாங்காங்குக்கேத் திரும்பியது. விமானம் தரையிறங்கியதும் ராபர்ட் கைது செய்யப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் நள்ளிரவில் விமானம் மீண்டும் லண்டன் புறப்பட்டுச் சென்றது.

கட்டுப்பாட்டிலேயே இல்லை...
இதுகுறித்து விமானத்தில் பயணித்த காத்தி வோங் என்ற பயணி தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதுகையில், அவர் சத்தமாக பேசினார். அங்குமிங்கும் நடந்தார். கட்டுப்பாட்டிலேயே அவர் இல்லை.

விமானம் திருப்பப் பட்டது...
எனது தோள்பட்டையைப் பிடித்து இழுத்தார். அபாயகரமான முறையில் ஜன்னல் அருகே போய் நின்றார். இதையடுத்து விமானம் திருப்பப்படுவதாக கேப்டன் அறிவித்தார் என்று கூறியுள்ளார்.

மயக்க ஊசி...
ராபர்ட் கட்டுப்பாடில்லாமல் இருந்ததால் அவருக்கு தற்காலிகமாக மயக்க ஊசி போட்டு கட்டுப்படுத்தியுள்ளனர் விமான ஊழியர்கள். பின்னர் அவரை ஒரு சீட்டில் உட்கார வைத்து சீட் பெல்ட்டைப் போட்டு கட்டியும் விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications