பஹல்காம் தாக்குதல் எப்படி சாத்தியமானது? இதை கவனிச்சீங்களா! சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஹீரோ முக்கிய அப்டேட்
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சாத்தியமானதற்கு இதுதான் முக்கியமான காரணம் என்று சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஹீரோவும், இந்திய ராணுவத்தின் வடக்கு படைப்பிரிவு முன்னாள் தலைமை அதிகாரியுமான லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் அதே நேரம், போர் உருவாகாமல் அந்த பதிலடி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் எனும் இடத்திற்கு அருகில் தீவரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடந்த இடம் சுற்றுலா பகுதியாகும். பஹல்காமிலிருந்து 6 கி.மீ தொலைவில் இந்த பகுதி அமைந்திருக்கிறது. இப்பகுதிக்கு போவதற்கு வாகன போக்குவரத்து வசதி கிடையாது. குதிரை மூலம் மட்டுமே போக முடியும். இதை தெரிந்துக்கொண்டுதான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றும் இந்த தாக்குதல், பாகிஸ்தானின் நன்கு திட்டமிட்டு நடத்திய தீவிர எச்சரிக்கை எனவும் ஹூடா கூறியுள்ளார்.
"தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைவான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்த இடம் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதி. ஏற்கெனவே சொன்னதை போல இங்கு பாதுகாப்பு படையினர் வருவதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால் இதை தெரிந்துக்கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டமிடல் மிக உயர்ந்த நிலை அதிகாரிகள் மூலம் நடந்திருக்கலாம். இந்த திட்டமிடல்தான் தாக்குதலை சாத்தியப்படுத்தியது.
அதேபோல இந்த தாக்குதலில் மத ரீதியான பிரிவினை நடந்திருக்கிறது. இதைவிட அதிர்ச்சியளிக்கும் சம்பவம் என்னவெனில், சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பதுதான். வழக்கமாக இப்படி சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படாது. இந்த தாக்குதல் மூலம் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியை சீர்குலைக்க முயற்சிகள் நடந்திருக்கிறது.
இந்த தாக்குதலுக்கு எல்லை கோட்டை தாண்டாமலேயே நம்மால் பதிலடியை துல்லியமாக கொடுக்க முடியும். முழுமையான போர் ஏற்படாமல் பதிலடி நடவடிக்கை கொடுப்பதே எங்களது நோக்கமாகும்" என்று ஹூடா கூறியிருக்கிறார்.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலுக்கும் இப்படியான பின்னணி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள 25 கோடி மக்களுக்கு ஆதாரமாக விளங்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடை நிறுத்திருக்கிறது.
இது அந்நாட்டின் ஆட்சியாளர்களிடம் கடுமையான எதிர்வினையை தூண்டியிருக்கிறது. தண்ணீரை நிறுத்தியிருப்பது போருக்கு சமமானது என்று கூறியுள்ள பாக் ஆட்சியாளர்கள் இந்தியா தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதத்தை கொண்டு பதிலடி கொடுக்கப்படும் என்று கொக்கரித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications