சாதித்தேவிட்டார் பாக். ராணுவ தளபதி- தூக்கியடிக்கப்பட்டார் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தலைவர் ஃபையஸ்!
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அதிகமாக மூக்கை நுழைத்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தலைவர் ஃபையஸ் அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள்ளார்.
பாகிஸ்தானில் மூன்று அதிகார மையங்கள் எப்போதும் செயல்படுகின்றன. பாகிஸ்தான் பிரதமர், பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆகியவைதான் இந்த மூன்று அதிகார மையங்கள்.
இந்த மூன்றும் ஆளுக்கொரு துருவங்களாகவே பயணிப்பது வழக்கம். அண்மையில் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்த மூன்று துருவங்களின் மோதல் அப்பட்டமாக அம்பலமானது.

ஆப்கானில் பாக். தலையீடு
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய உடனே பாகிஸ்தான் அங்கே தலையிடத் தொடங்கியது. பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவரான ஃபையஸ் உடனடியாக காபூல் சென்றார். தாலிபான்கள் தலையெடுத்த பின்னர் ஆப்கான் சென்ற முதல் வெளிநாட்டு பிரமுகரும் அவரே. தாலிபான்களின் முக்கிய தளபதிகளை ஃபையஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

எப்படி நெருக்கம்?
தாலிபான்களுக்கு கடந்த 20 ஆண்டுகாலமாக அடைக்கலம் கொடுத்த நாடு பாகிஸ்தான். எல்லையில் தாலிபான்களை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளிடம் இருந்து பாதுகாத்ததும் அந்த நாடுதான். தாலிபான்கள் அமைப்புக்குள் இருக்கும் பயங்கரவாத குழுக்கள் எப்படி செயல்படுகின்றன என்பதும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-க்கு அத்துப்படி. அதனால்தான் ஃபையஸ் முதல் நபராக ஆப்கான் சென்றார்.

அதிருப்தி அடைந்த ராணுவ தளபதி
ஆனால் ஃபையஸின் இந்த பயணத்தை பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வா விரும்பவில்லை. உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-ம் சரி, தாலிபான்களும் சரி தமது கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்பது பாஜ்வாவின் நிலைப்பாடு. அதனால் ஃபையஸை எப்படியாவது ஐ.எஸ்.ஐ. தலைவர் பதவியில் இருந்து தூக்கியடிப்பது என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் பாஜ்வா. இத்தனைக்கும் பாஜ்வாவுக்கு தொடக்கத்தில் மிக நெருக்கமாக இருந்தவர்தான் ஃபையஸ்.

ஐ.எஸ்.ஐ. தலைவர் நீக்கம்
தற்போது ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து ஃபையஸ் தூக்கியடிக்கப்பட்டுள்ளார். இதனை பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் பெஷாவர் கார்ப்ஸ் படைப் பிரிவின் தளபதியாகவும் ஃபையஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ. அமைப்பின் புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அஞ்சும் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் பஞ்சாப் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்தவர் நஜீம் அஞ்சும். கராச்சி படைப்பிரிவுத் தலைவராகவும் நஜீம் அஞ்சும் பணியாற்றியவர். பயங்கரவாதம் தலைதூக்கி இருக்கும் பலுசிஸ்தான் படைப்பிரிவின் தளபதியாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அஞ்சும் என்கின்றன பாக். தகவல்கள்.












Click it and Unblock the Notifications