தீவிரவாதிகளை நாளையே பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும்: அரசுக்கு பாக். மக்கள் கெடு
பெஷாவர்: பாகிஸ்தானில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளை நாளையே பொது இடத்தில் மக்கள் கண் முன்பாக தூக்கிலிட வேண்டும் என்று அந்த நாட்டு மக்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.
தீவிரவாதிகளை ஒடுக்க அரசுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பாகிஸ்தான் மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். #WeWantPublicExecutionTomorrow என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் உருவாக்கி அதன் மூலம் சமூக வலைத்தளங்களில் இக்கோரிக்கையை வலுப்படுத்தி வருகின்றனர் பாகிஸ்தான் மக்கள். அதுமட்டுமின்றி ஆன்லைனில் கையெழுத்து இயக்கங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

இவர்கள் அனைவரின் கோரிக்கையும் ஒன்றுதான். குழந்தைகள் என்றும் பாராமல் கொலை செய்த தீவிரவாதிகளை பிடித்து வந்து மக்கள் கண் எதிரிலேயே தூக்கிலிட வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒற்றை கோரிக்கை. அதுவும் நாளைக்கே அதை செய்ய வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கெடு கொடுக்கும் விதமாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழு இன்னும் ஏழு நாட்களுக்குள் தீவிரவாதிகளை அழிக்க செயல் திட்டம் வகுக்கும் என்றும் கூறியிருந்தார். தூக்கு தண்டனைக்கு விதித்த தடையையும் பாகிஸ்தான் தளர்த்தியுள்ளது.
ஆனால் மக்கள் கெடு விதிப்பதை பார்த்தால் அவர்கள் இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள போவதில்லை என்பது தெரிகிறது. நாளைக்குள் அரசு சில தீவிரவாதிகளையாவது பலி கொடுக்காவிட்டால், பாகிஸ்தானில் மக்கள் புரட்சி வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications