EXCLUSIVE | பாக். பிரதமர் பதவியை இழக்கிறாரா இம்ரான் கான்? நெருக்கடி தரும் ராணுவ தளபதி.. பரபரப்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதவி விரைவில் பறிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அவரே பதவி விலகும் வாய்ப்புகளும் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
Recommended Video
பாகிஸ்தானில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிலவி வருகின்றன. அந்நாட்டு அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக மோதல் ஏற்பட தொடங்கி உள்ளது. பிரதமர் இம்ரான் கான் ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா ஆகியோருக்கு இடையில் பல விஷயங்களில் கடும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
இதனால் ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா தற்போது இம்ரான் கான் அரசை கவிழ்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

நியமனம் பிரச்சனை
பாகிஸ்தான் நாட்டின் உளவு படை தளபதியாக நதீம் அஞ்சும் வரும் நவம்பர் 20ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். ஆனால் இவரின் நியமனத்திற்கு ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போதைய உளவுப்படை தளபதி பைஸ் ஹமீத்தான் தொடர்ந்து இதில் தளபதியாக நீடிக்க வேண்டும் என்று ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா கூறி வருகிறார். இந்த நியமனம்தான் இம்ரான் கானுக்கும் ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வாவிற்கும் இடையிலான மோதலாக உருவெடுத்துள்ளது.

பொருளாதாரம்
ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டு பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. கடந்த 2 வருடத்தில் அந்நாட்டு பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. நாட்டில் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் மக்கள் எதிர்ப்பையும், ராணுவம் கொடுக்கும் ஆதரவையும் வைத்துக்கொண்டு ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா இம்ரான் கானின் அரசை தூக்கி அடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

வாய்ப்பு 1
அதன்படி இம்ரான் கானுக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். முதல் வாய்ப்பு இம்ரான் கான் தானாக முன் வந்து பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். நவம்பர் 20ம் தேதிக்குள் அவர் தானாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா தரப்பில் கெடு விதிக்கப்பட்டு இருக்கிறதாம்.

வாய்ப்பு 2
இரண்டாவது வாய்ப்பு, இம்ரான் கான் பதவி விலகவில்லை என்றால் அங்கு நாடாளுமன்றத்தில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கு அளிக்கப்படும் ஆதரவை மற்ற கட்சிகள் வாபஸ் வாங்கும் என்று கூறப்படுகிறது. அதாவது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல கட்சிகள் இம்ரான் கானின் கட்சிக்கு ஆதரவு அளித்து கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆதரவை வாபஸ் வாங்கினால் தானாக ஆட்சி கவிழும்.

இரண்டு பேருக்கு வாய்ப்பு
இந்த இரண்டில் ஒன்றில் இந்த மாத இறுதிக்குள் அங்கு நடக்கும் என்கிறார்கள். இரண்டில் எது நடந்தாலும் இம்ரான் கான் பதவி விலகவே அதிக வாய்ப்பு உள்ளதாம். ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வாவின் கைப்பாவையாக இருக்கும் ஒருவர் பிரதமர் ஆகும் வாய்ப்புகள் உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. பிடிஐ கட்சியை சேர்ந்த பர்வேஸ் கட்டாக், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கை சேர்ந்த சபாஷ் ஷெரிப் ஆகியோரில் ஒருவர் பிரதமர் ஆகும் வாய்ப்புகள் உள்ளதாம்.

போராட்டம்
பாகிஸ்தானில் தெரீக் இ லப்பாய்க் அமைப்பு கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிராக போராடி வருகிறது. தங்கள் அமைப்பின் தலைவர் சாதி ரிஸ்வியை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்த அமைப்பு ஆக்ரோஷமாக போராடி வருகிறது. இதுவரை இந்த போராட்டம் பல முறை கலவரமாக மாறி அதில் பல முறை போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.

பின்னணியில் ராணுவம்
இது அரசுக்கு பெரிய அழுத்தமாக மாறி உள்ளது. இந்த போராட்டத்திற்கு பின்னில் இருப்பதே ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வாதான் என்றும் கூறப்படுகிறது. இவரின் அனுமதியின் பெயரில்தான் இந்த போராட்டம் நடக்கிறது. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்றுதான் போராட்டம் தூண்டி விடப்படுகிறது என்று பாகிஸ்தான் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிரட்டல்
பிரதமர் இம்ரான் கானுக்கும் ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வாவிற்கும் இடையில் தற்போது கடும் மோதல் மறைமுகமாக நிலவி வருகிறது. இந்த பனிப்போர் பாகிஸ்தானில் பெரிய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தலாம். வெகு விரைவில் ஆட்சி மாறலாம் என்றே அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Credit: news18.com












Click it and Unblock the Notifications