காஷ்மீருக்காக இந்தியாவுடன் போர் புரியவும் பாகிஸ்தான் தயாராக உள்ளது: முஷாரப் கொக்கரிப்பு
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிரான போருக்கு பாகிஸ்தான் ராணுவம் தயாராகவே உள்ளதாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய தாக்குதல் உக்கிரமானதும் ஐநாவிடம் தஞ்சமடைந்தது பாகிஸ்தான். ஆனால் ஐநா இந்த விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என்று கூறிவிட்டது.இந்நிலையில், பாக். முன்னாள் அதிபர் முஷாரப் இன்று அளித்த பேட்டியில், "காஷ்மீர் மக்கள் ஆர்வமுடன் உள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக போர்தொடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராகவே உள்ளது.

காஷ்மீருக்காக போர் தொடுக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்கள் எதிர்பார்க்கிறார்கள். காஷ்மீரும் எதிர்பார்க்கிறது. அதை செய்யும் திறமை பாகிஸ்தானுக்கு உள்ளது.
இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசும்போது அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது, காஷ்மீரிலுள்ள மக்களுக்கு எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்று பாகிஸ்தான் ராணுவம் யோசித்து தாக்குதலை நடத்துகிறது. ஆனால் இந்திய ராணுவத்துக்கு அதுபோன்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது என்பதால் பாகிஸ்தான் அதிகம் பாதிக்கப்படுகிறது.
இந்திய பிரதமர் மோடி முஸ்லிம்களுக்கு எதிரானவர். பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள அரசியல்வாதி. அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட , மற்ற நடவடிக்கைகளும் பாகிஸ்தான் தயாராகவே இருக்க வேண்டும்.
பிரிட்டீஷ் அரசின் போது வளைந்து கொண்டு பின்னால் சென்றதைப்போல, இப்போது மோடியின் பின்னால் போவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டு, நமது நாட்டு கவுரவத்தை காப்பாற்ற வேண்டும். காஷ்மீர் பாகிஸ்தானின் தேசிய பிரச்சினை. அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இவ்வாறு முஷாரப் தெரிவித்துள்ளார்.
முஷாரப் அதிபராக இருந்தபோதுதான், இந்தியா-பாகிஸ்தான் நடுவே கார்கிலில் போர் மூண்டதும், போரின் இறுதியில் பாகிஸ்தான் தோற்று மண்ணை கவ்வியதும் நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications