முஷரப் வெளிநாடு செல்ல மீண்டும் முட்டுக்கட்டை... மேல்முறையீடு செய்தது பாக். அரசு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடையில்லை என்ற சிந்து மாகாண உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அந்நாட்டு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் தலைமை வழக்கறிஞர் சல்மான் அஸ்லம் பட் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தேசத்துரோக குற்றச்சாட்டு உள்பட பல்வேறு வழக்குகள் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனால், வெளிநாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த முஷரப், கடந்தாண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் பொதுத் தேர்தலுக்காக நாடு திரும்பினார்.

அவர் மீது நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளின் காரணமாக நாடு திரும்பிய முஷரப் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். மேலும், வெளிநாடுகளுக்கு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டது.
ஆனால், இந்த தடையை நீக்கக்கோரி சிந்து மாகாண உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் முஷரப். அதில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, ஐக்கிய அரபு எமிரேட்சில் இருக்கும் உடல்நலம் குன்றிய தன் தாயாரைப் பார்ப்பதற்காக தன் மீதான பயணத் தடையை நீக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால், முஷரப் மீதான பயணத் தடையை நீக்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், வெளிநாடுகளுக்கு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலில் இருந்து முஷரப்பின் பெயரை நீக்கவும் அவர்கள் உத்தரவிட்டனர்.
இதன்மூலம் சுமார் 14 மாத இடைவெளிக்குப் பின், முஷரப் மீண்டும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு உண்டானது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசு சார்பில் இன்று மேல்முறையீடு மனு செய்யப் பட்டுள்ளது. அதில், வெளிநாடு செல்வதற்கான கட்டுப்பாட்டு பட்டியலில் உள்ள முஷரப் பெயரை நீக்க அனுமதிக்கக் கூடாது என்றும், முஷரப்பை வெளிநாடு செல்ல அனுமதித்தால் அவர் தேசத்துரோக வழக்கு விசாரணைக்காக மீண்டும் நாட்டிற்கு திரும்பி வரமாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு சாதகமாக வரும் வரை முஷரப் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications