பாகிஸ்தான் பங்கு சந்தையில்.. பாசிட்டிவ் சைன்! IMF சலுகை+போர் நிறுத்தத்தால் திடீர் மாற்றம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பங்கு சந்தை கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வை எட்டியிருக்கிறது. சண்டை நிறுத்தம் மற்றும் ஐஎம்எஃப் சலுகை காரணமாக இந்த மாற்றம் நடந்திருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்து வந்தது. இது அந்நாட்டின் பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. அதாவது சண்டை நேரத்தில் அந்நாட்டின் பங்கு சந்தை குறியீட்டு எண் (KSE-30) மைனஸ் 2 என்கிற அளவுக்கு குறைந்தது.

இப்போது சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, ஐஎம்எஃப் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பாகிஸ்தானுக்கு நிதி உதவியையும் வழங்கியிருக்கிறது. இதனால் அந்நாட்டில் முதலீடுகள் அதிகரித்திருக்கின்றன. இதனால் பங்கு சந்தை குறியீட்டு எண் 9 என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அந்நாட்டின் பங்கு சந்தையை பொறுத்தவரை கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வாக இது பார்க்கப்படுகிறது. கடைசியாக 2008ல் இந்த உயரத்தை பங்கு சந்தை தொட்டது.
ஐஎம்எஃப் வழங்கிய கடன் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது போர் நடந்தாலும் கூட சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படாது, போட்ட பணம் பத்திரமாக இருக்கும் என்று அவர்கள் நம்பியுள்ளனர். எனவேதான் முதலீடு அதிகரித்திருக்கிறது. நேற்றைய தினம் 8.5 என்கிற அளவில் பங்கு சந்தை முடிவடைந்திருக்கிறது.
மறுபுறம் இந்திய பங்கு சந்தையும் உயர்வை தொட்டிருக்கிறது. நிஃப்டி50 மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் 3 சதவீதம் உயர்ந்ததால் பங்கு சந்தை வர்த்தகம் அதிகரித்திருக்கிறது. சண்டை சமயத்தில் இந்திய பங்கு சந்தை, பாகிஸ்தானை போல அடி வாங்கவில்லை. பஹல்காம் தாக்குதலின்போதும், அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டபோதும் இந்திய பங்கு சந்தை +2 என்கிற அளவில் இருந்தது. நேற்று +3 என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
இருப்பினும் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் மோதல்கள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. குறிப்பாக, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி இருந்து. இந்த தடையை இன்னும் நீக்கவில்லை. ஆகவே பாக் பங்கு சந்தை சற்று பதற்றத்தில்தான் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications