இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் போர்? பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் சொன்ன வார்த்தை.. பதற்றம்
இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்ட போது, பாகிஸ்தான் சரணடைந்தது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே எப்போதுமே மோதலே இருந்து வந்துள்ளது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதே இதற்குப் பிரதானக் காரணமாகும். கடந்த ஏப்ரல் மாதம் கூட இப்படித் தான் பஹல்காமில் மோசமான தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. அதற்குப் பதிலடியாக இந்தியாவும் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது.

இந்தியா பாகிஸ்தான் மோதல்
அதன் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தியா மீது அத்துமீறித் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றது. ஆனால், இந்தியா கொடுத்த பதிலடியால் பாகிஸ்தான் திணறிப் போனது. இந்தியா தாக்குதலை நிறுத்தினால் போதும் எனச் சொல்லிச் சரணடைந்துவிட்டது. இவ்வளவு அடி வாங்கிய பிறகும் பாகிஸ்தான் அடங்கவில்லை.
கவாஜா ஆசிஃப்
இப்போது பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் மீண்டும் இந்தியா குறித்து சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார். முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் ஆட்சியின் கீழ் மட்டுமே இந்தியா உண்மையாக ஒன்றுபட்டு இருந்ததாகக் கூறிய அவர், மற்ற எப்போதும் இந்தியா ஒன்றுபட்டு இருந்ததில்லை என்று எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் வாய்க்கு வந்ததைக் கூறினார். மேலும், இந்தியாவுடன் போர் வருவதற்கான வாய்ப்பு உண்மையாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் உள்ள பிரபல டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் "ஔரங்கசீப் ஆட்சி தவிர, வேறு எப்போதும் இந்தியா ஒருபோதும் ஒன்றுபட்ட தேசமாக இருந்ததில்லை. பாகிஸ்தான் இறைவனுக்காக உருவாக்கப்பட்டது. உள்நாட்டில் நாம் சண்டையிடுகிறோம். அடித்துக் கொள்கிறோம். ஆனால் இந்தியாவுடன் சண்டை என்றால், நாம் அனைவரும் ஒன்றிணைவோம்" என்றார்.
பொய் தகவல்
பிரிட்டன் ஆட்சியாளர்களிடம் இருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் தான் சுதந்திரம் பெற்றது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இன்று ஒரு நிலையான மற்றும் வேகமாக வளரும் ஜனநாயக நாடாகத் திகழ்கிறது. மறுபுறம் பாகிஸ்தான் பல ராணுவ ஆட்சி கவிழ்ப்புகள், உள்நாட்டுப் பிளவுகளைக் கண்டுள்ளது. நாடே திவாலாகும் ஒரு சூழலில் பாகிஸ்தான் இருக்கிறது. இதனால் வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் பாகிஸ்தான் ஆதாரமில்லாத கருத்துகளை இதுபோல கூறி வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் போர்
தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்துப் பேசிய அவர், "இந்தியாவுடன் மீண்டும் போர் வருவதற்கான வாய்ப்புகள் உண்மையானவை.. நான் அதை மறுக்கவில்லை.. நான் பதற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.. ஆனால் இருக்கும் அபாயங்கள் உண்மையானவை.. போர் வந்தால், கடவுளின் அருளால், முன்பைவிட சிறந்த முடிவு நமக்குக் கிடைக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் தான இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திவேதி, "இந்த முறை இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது. ஆபரேஷன் சிந்துர் 1.0ல் காட்டிய நிதானத்தை இம்முறை காட்ட மாட்டோம். இந்த முறை பாகிஸ்தான் வரைபடத்தில் இருக்குமா சிந்திக்க வேண்டிய அளவுக்கு நடவடிக்கை இருக்கும்" என்றும் திவேதி தெரிவித்தார். மேலும், தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications