பாகிஸ்தானின் முக்கிய விமான நிலையங்கள் 48 மணி நேரம் அவசரமாக மூடல்
இஸ்லாமாபாத்: இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் காரணமாக பாகிஸ்தானின் முக்கிய விமான நிலையங்கள் 48 மணி நேரம் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பஞ்சாப் உட்பட பாகிஸ்தானின் பல பகுதிகளில் இன்று அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் 48 மணி நேரம் மூடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு கடற்படை மற்றும் புலனாய்வு அதிகாரி உட்பட 26 பேர் சுற்றுலா வந்த இடத்தில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா இன்று (புதன்கிழமை) அதிகாலை 1.44 மணிக்கு, 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள முரிட்கா மற்றும் பஹாவல்பூர் ஆகிய இரண்டு இடங்களிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய இரண்டு இடங்களில் இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது.

இந்தியாவின் முப்படைகளான - இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்டன. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் ஒன்பது பயங்கரவாத தளங்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பதாக நம்பப்படும் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகமான முரிட்கே மற்றும் மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்-இ-முகமதுவின் தளமான பஹல்பூர் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது..
முன்னததாக பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தூதர்களை குறைப்பது, பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது, இந்தியர்களை உடனே நாட திரும்ப உத்தரவிடுவது, சிந்து நதி நீரை நிறுத்துவது, பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியை நிறுத்துவது உள்பட பல்வேறு நடவடிக்கையில் இறங்கியது. இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் இந்திய விமான நிறுவனங்களுக்கு தனது வான்வெளியை உடனடியாக மூடியது. அதற்கு பதிலடியாக இந்தியாவும் பாகிஸ்தானுக்கு வான்வெளியை மூடியது.
தற்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் அச்சம் அடைந்துள்ள பாகிஸ்தான், அந்நாட்டின் முக்கிய விமான நிலையங்களை 48 மணி நேரம் மூடியுள்ளது. அதேநேரம் இந்தியாவும் காஷ்மீரின் முக்கிய விமான நிலையமான ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து எந்த பயணிகள் விமானங்களும் இன்று இயக்கப்படாது என்று அறிவித்துள்ளது.
முன்னதாக இந்திய ராணுவம், பாகிஸ்தானில் எல்லை தாண்டி சென்று நடத்திய தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தது. காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் எதுவும் தாக்கப்படவில்லை என்றும், தீவிரவாதிகளின் முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டது என்றும் கூறியுள்ளது . பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று இந்தியா எதிர்பார்த்தது என்றும், ஆனால் அதற்கு பதிலாக "மறுப்பு" நடவடிக்கையில் பாகிஸ்தான் செயல்பட்டதாகவும் இந்தியா கூறியுள்ளது.
இதனிடையே ஐந்து இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதற்கு தக்க பதிலடி தருவோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆவேசமாக கூறினார். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு பிறகு, அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications