இஸ்ரேலின் இனப்படுகொலை.. பலி எண்ணிக்கை 500ஐ தாண்டியது!
காஸா: பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. மிகக் கொடூரமான இந்த போரை உடனே நிறுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி மற்றும் தரைப்படை தாக்குதலுக்கு எதிராக ஹமாஸ் போராளிகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
13 நாட்களாக நீடித்து வரும் இந்த தாக்குதலில் இதுவரை குழந்தைகள், சிறுவர், சிறுமியர் முதியவர்கள், பெண்கள் என மொத்தம் 501 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். 3 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்களில் நேற்றைய தாக்குதலில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். நிலைமை மோசமடைந்ததையடுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவசரப் பயணம் மேற்கொண்டார்.
இதனிடையே ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், 2012-ம் ஆண்டு செய்து கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்படி, இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் போராளிகள் உடனடியாக தாக்குதல்களை கைவிட்டு அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.