மலேசிய விமான விபத்து: 3 குழந்தைகளை பறிகொடுத்து தனிமரமாக நிற்கிறோம்- ஆஸி தம்பதி
கான்பெர்ரா: உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமானத்தில் சென்ற தங்களின் 3 குழந்தைகள் இறந்ததையடுத்து ஆஸ்திரேலிய தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையை படித்துப் பார்ப்போரின் கண்களில் கண்ணீர் துளிகள் வருகின்றன.
கடந்த 16ம் தேதி நெதர்லாந்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் உடல் கருகி பலியாகினர்.
இந்த சம்பவத்தில் தங்களின் 3 குழந்தைகளை இழந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கை நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.

ஆஸ்திரேலிய குழந்தைகள்
மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் அந்தோனி மஸ்லின் மற்றும் அவரது மனைவி மரைட்(ரின்) நோரிஸ். அவர்களின் மகன்கள் மோ(12), ஓடிஸ் மஸ்லின்(8) மற்றும் மகள் ஈவீ(10) ஆகியோர் தங்களின் தாத்தா நிக் நோரிஸுடன் மலேசிய விமானத்தில் சென்று பலியாகியுள்ளனர்.

தகவல்
குழந்தைகளை பறிகொடுத்த அந்தோனி மற்றம் அவரது மனைவி ரின் சேர்ந்து உக்ரைன், அரசியல்வாதிகள், மீடியா, நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

வலி
எங்களின் வலி தாங்க முடியாதது. நாங்கள் நரகத்தையும் தாண்டிய ஒரு நரகத்தில் வசிக்கிறோம். எங்களின் குழந்தைகள் தற்போது எங்களுடன் இல்லை.

துயரம்
இனி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் இந்த வேதனையுடன் தான் நாங்கள் வாழ வேண்டும். நாங்கள் அனுபவிக்கும் துயரத்தை வேறு யாரும் அனுபவிக்க வேண்டாம். எங்கள் குழந்தைகளை சுட்டுத் தள்ளியவர்கள் கூட இந்த துயரை அனுபவிக்க வேண்டாம்.

அன்பு
எங்கள் குழந்தைகள் மோ, ஈவீ, ஓடிஸ் மீதான அன்பு உலகில் உள்ள வெறுப்பை விட உறுதியானது. தாத்தா நிக் மீதான அன்பு மிகவும் உறுதியானது.

ஞாபகம்
எங்களை பாதிக்கும் ஒரு முடிவு எடுக்கையில் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

உறவினர்கள்
நாங்கள் வீட்டுக்கு வந்ததில் இருந்து எங்களை சுற்றி உறவினர்களும், நண்பர்களும் உள்ளனர். அவர்களின் அன்பு தான் எங்களை உயிருடன் வைத்துள்ளது. இனி எங்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இல்லை. நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் சமூகத்தை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கதை
எங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் தனிமையை மதிக்குமாறு மீடியாவை கேட்டுக் கொள்கிறோம். எங்களின் வலி ஒரு கதை அல்ல என்று அந்தோனி, ரின் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications